என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
அஜீரண உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகள்
Byமாலை மலர்18 July 2021 3:36 AM GMT (Updated: 18 July 2021 3:36 AM GMT)
செரிக்க கடினமான, கனமான உணவுப் பொருட்களை, செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை அரை வயிறு உண்டுவிட்டு நிறுத்திவிட வேண்டும்.
பழைய காலங்களில் சாதாரண நாட்களில் இனிப்பு, கார வகைகள், நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது வழக்கமாக இருந்ததில்லை. என்றைக்காவது வரும் பண்டிகை நாட்களில்தான் இட்லி, தோசையே கிடைத்து வந்தது. ஆனால் இன்றைக்கு தடுக்கி விழுந்தால் ஒரு நொறுக்குத்தீனி கடையில் முட்டும் அளவுக்கு கடைகள் பெருகிவிட்டன. நொறுக்குத்தீனி உண்பதும் கட்டுப்பாடு இல்லாமல் பெருகிவிட்டது. ஏன் எல்லா நாட்களிலும் அளவுடன் உண்ண வேண்டும் என்பதை ஆயுர்வேதம் மாத்ராதீசியம் என்ற பெயரில் விளக்குகிறது. தக்க முறைப்படி உண்பதுதான் மாத்திரை. அளவை குறைத்தோ, கூட்டியோ உண்ணக் கூடாது. அஜீரணத்தை ஏற்படுத்தும் உணவை பற்றி நினைக்கவும் கூடாது; நன்மை பயக்கும் உணவையும், கெட்ட உணவையும் சேர்த்து உண்ணக் கூடாது; ஒரு முறை சாப்பிட்ட உணவு செரிமானம் அடைவதற்கு முன்பு உண்ணக் கூடாது.
உணவின் அளவை பொறுத்து உடலில் இருக்கின்ற ஜடாராக்னி வேலை செய்கிறது. ஒருவருடைய செரிக்கும் சக்தியான அக்னியின் பலத்தை பொறுத்து, உணவின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. எந்த அளவு உணவு இயற்கையாக உடலை கெடுக்காமல், உரிய காலத்தில் ஜீரணமாகிறதோ அது ஒருவருக்கு தேவையான உணவாகும். அக்னியின் தன்மைக்கேற்ப உணவை உண்ண வேண்டும்.
அக்னியின் பலத்தை பொறுத்தே, மனிதனின் பலம் உருவாகிறது. அதன் அடிப்படையிலேயே நம்முடைய செயல்பாடுகள், வேலைகள் அமைகின்றன. செரிக்க கடினமான, கனமான உணவுப் பொருட்களை, செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை அரை வயிறு உண்டுவிட்டு நிறுத்திவிட வேண்டும். இலகுவான உணவுப் பொருட்களை சற்று கூடுதலாக சாப்பிடலாம். உண்ட உணவு, தக்க காலத்தில் தீங்கு செய்யாமல் செரிக்க வேண்டும்.
உணவின் அளவை மிகவும் குறைத்து உண்டால் உடலின் பலமும், பொலிவும் குறையும், வாத நோய்கள் உண்டாகும். உண்ட உணவு செரிக்காமல், வாந்தி ஆகாமல், மலம் ஆகாமல் மந்தமாக உடலில் தங்கி இருக்கும். சில நேரங்களில் வயிற்றை ஊசியால் குத்துவது போன்று காணப்படலாம். வயிற்று வலி, வயிற்று பொருமல், தலைவலி, தலைச்சுற்றல், விரைப்பு, வாந்தி, சளி உருவாதல் போன்றவை காணப்படும். பலம் குறையும், இவற்றுக்கு `ஆமம்’ என்று பெயர்.
தகாத உணவை, கூடாத உணவை அளவுக்கு அதிகமாக உண்டால் அது விஷத்தன்மை பெறும். பழைய காலத்தில் இப்படிப்பட்டவர்களுக்கு வசம்பு, இந்துப்பு ஆகியவற்றைக் கொடுத்து வாந்தி வரச் செய்வார்கள். இலகுவான அரிசி கஞ்சியைக் கொடுப்பார்கள். அஜீரண நிலையில் மருந்து கொடுக்க மாட்டார்கள், தானாக உபவாசம் இருந்து செரிக்க விடுவார்கள். பிறகு செரிப்பதற்கான மருந்துகளைக் கொடுப்பார்கள். இந்த செமிக்காத உணவு எந்த நிலையில் இருக்கிறது என்பதை பொறுத்து சிகிச்சை மாறும். குறைந்த நிலையில் இருந்தால் உபவாசம் இருப்பது நல்லது. நடுநிலையில் இருந்தால் உபவாசத்துடன் பக்குவ தன்மையுடைய மருந்து தரலாம். மிக அதிகமாக இருந்தால் தோஷங்களை வெளியேற்றும் சிகிச்சை செய்வார்கள்.
எப்போதும் உடலுக்கு பழக்கமான, ஒத்துக்கொள்ளக்கூடிய, சுத்தமான, நன்மை தரக்கூடிய உணவை மனதை ஒருநிலைப்படுத்தி உண்ண வேண்டும். அவசரமாகவும் இல்லாமல், சோம்பலாகவும் இல்லாமல் நடுத்தர அளவில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய நெய்ப்பு, உஷ்ணமுடைய, இனிப்பு, அறுசுவை உணவை உண்ண வேண்டும். குளித்துவிட்டு, அமைதியான மனநிலையுடன் உணவைச் சாப்பிட வேண்டும். உணவு சற்று திரவமாக இருக்க வேண்டும். அதிகமாக தயிர், சமைக்காத முள்ளங்கி, உளுந்து, சிறுகடலை, மாவு பண்டங்கள், சர்க்கரை பாகு ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பலாப்பழம், மாம்பழம் முதலியவை எளிதில் ஜீரணமாகாது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X