search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உணவும்.. உணர்வும்.. உண்மைகளும்..
    X
    உணவும்.. உணர்வும்.. உண்மைகளும்..

    உணவும்.. உணர்வும்.. உண்மைகளும்..

    நாம் வாழும் இடத்தின் தட்ப வெப்பநிலை, நமது உழைப்பு, நமது மனநிலை போன்றவைகளுக்கு ஏற்ப நமது உடலின் தேவைகள் மாறுபடும். அதற்கு ஏற்றார்போல் நமது உணவும் இருக்கவேண்டும்.
    உணவும், உணர்வும் உண்மையிலேயே மலரும், மணமும் போல பிணைந்துள்ளன. எதை நாம் உணவாக உண்கிறோமோ அதுவே நாமாக மாறிவிடுகிறது. மனிதனின் உணர்வுகளை குணம் என்று சொல்கிறோம். அதனை சாந்தகுணம், ரஜஸ்குணம் தாமசகுணம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். இனிய, சுவை மிகுந்த, உடலுக்கு வலிமை தரும் நல்ல உணவு வகைகள் மேன்மையான சாந்த குணத்தை வளர்க்கும். இந்த வகை உணவுகளை உண்பவர்கள் அதிகம் பதற்றமடையமாட்டார்கள். எதிலும் நிதானமான போக்கை கடைப் பிடிப்பார்கள். சிந்தனையும், செயலும் வளமாக இருக்கும்.

    அதிக காரம், அதிக உப்பு, அதிக புளிப்பு, கசப்பு, அதிக சூடு நிறைந்த உணவுகள் ரஜஸ் குணத்தை வளர்க்கும். இத்தகைய உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் வழக்கம்கொண்டவர்கள் பெரும்பாலும் வேகம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆழ்ந்து சிந்திக்காமல் அவசரமாக முடிவெடுப்பது, பிடிவாதம் பிடிப்பது, விட்டுக்கொடுக்காத தன்மையுடன் வாழ்வது போன்ற குணங்கள் அவர்களிடம் இருக்கலாம். அதன் மூலம் ரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய், வயிற்றுப்புண், மன உளைச்சல் போன்ற பல வியாதிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது.

    பழைய உணவு, சுவை இழந்த உணவு, பலமணிநேரம் ஆன உணவு வகைகளை உண்பதால் மந்த புத்தியாகும் சூழ்நிலை உள்ளது. இது தாமச குணமாக குறிப்பிடப்படுகிறது. இவர்கள் சுறுசுறுப்பின்றி, மனச்சுமை, மன அழுத்தத்தால் வாழும் நிலை ஏற்படலாம்.

    உணவு, நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமானது. நாம் உண்ணும் உணவுகள் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், உயிர் சத்துக்கள், தாதுக்கள் போன்ற முக்கியமான சத்துக்கள் நிறைந்ததாக இருக்கவேண்டும். நாம் வாழும் இடத்தின் தட்ப வெப்பநிலை, நமது உழைப்பு, நமது மனநிலை போன்றவைகளுக்கு ஏற்ப நமது உடலின் தேவைகள் மாறுபடும். அதற்கு ஏற்றார்போல் நமது உணவும் இருக்கவேண்டும்.

    இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் சாப்பிடக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உடலில் சக்திக்கு, செல்களின் வளர்ச்சிக்கு, உறுப்புகளின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு சமச்சீரான சத்துணவு தேவை. அவைகளை நாம் கவனமாக தேர்ந்தெடுக்கவேண்டும். தாது உப்புக்கள் அதிகம் உள்ள இளம் கீரைகள், புதிதாய் பறித்த இளம் காய்கறிகள், பழங்கள் போன்றவை முதல் தரமான உணவுகளாகும். புரத பொருட்கள், கொழுப்புள்ள உணவு, கிழங்குகள், பருப்புகள் ஆகியவை இரண்டாம் நிலை உணவுகள். இவை இரண்டுமே நமக்கு தேவை. ஆனால் அவரவர் உடலுக்கும், உழைப்பிற்கும் தகுந்தபடி அவைகளை உட்கொண்டால் நோயின்றி வாழ வாய்ப்பிருக்கிறது.

    இதயநோயும், சர்க்கரை நோயும் இப்போது பெரும்பாலானவர்களை தாக்குகிறது. பதினெட்டு வயதுடைய பையனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்ற சமீபத்திய செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதே நேரத்தில் மேற்கண்ட இரு நோய்களையும் வரும்முன்னே தடுக்கலாம். அதற்கு வாழ்க்கை முறை, சீரான எண்ணங்கள், பக்குவமான மனது, ஆரோக்கியமான உணவு போன்றவை அவசியம்.

    அதிக எரிசக்தி (கலோரி) தரும் உணவு வகைகளை அடியோடு தவிர்க்கவேண்டும். ரத்தக்கொதிப்பு இருக்குமேயானால் உப்பு அதிகம் உள்ள உணவு வகைகளான ஊறுகாய், அப்பளம், கெட்சப், பொரித்த குறுந்தீனி வகைகள், பீட்சா, பர்க்கர் போன்ற வகைகளையும், தயார் நிலையில் உள்ள துரித உணவுகளான நூடுல்ஸ், உப்பு பிஸ்கெட் போன்றவற்றையும் அறவே நிறுத்த வேண்டும். பச்சை காய்கறிகளாலான சாலட், பழங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

    இதய நோயை தடுக்க ரூமாலி ரோட்டி, நான், துரித உணவுகள், சிப்ஸ் வகைகள், பாலாடை கட்டி, கோவா, கிரீம், முட்டை மஞ்சள் கரு, பதப்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகள், சுவீட்ஸ், சாக்லேட், ஐஸ்கிரீம், கேக், பேக்கரி உணவுகள், இறைச்சி, இறால்மீன் போன்றவற்றை தவிர்க்கவேண்டும். கோதுமை, அரிசி, கேப்பை, கம்பு, சோளம், முளைகட்டிய பயறு, கீரை, கொழுப்பு நீக்கிய பால், முட்டை வெள்ளை கரு, பப்பாளி, பூண்டு, தக்காளி, சால்மன் மீன்கள் முதலியவைகளை எடுத்துக்கொள்ளலாம். சீரான உடற்பயிற்சி செய்யவேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை அறவே நீக்கவேண்டும்.

    பொதுவாகவே வெள்ளை நிறத்திலான உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. பல வண்ணங்களை கொண்ட இயற்கை உணவை சாப்பிட வேண்டும். சோயா பீன்ஸில் உள்ள ‘லெசித்தின்’ (LECITHIN) என்ற வேதிப்பொருள் இதயத்தை காக்கும். இது கெட்ட கொழுப்பை குறைக்கும். இந்த வேதிப்பொருள் புரோக்கோலி, முளைகட்டிய பயறு, சோயாபீன்ஸ், அவரை, பருப்பு வகைகளில் அதிகமாக இருக்கிறது. பழங்கள், குருதி நெல்லி, வேர்கடலை போன்றவற்றில் இருக்கும் ப்ளாவினாய்ட்ஸ் (FLAVENOIDS) இதயத்தின் தசை செல்களுக்கு நன்மைபயக்கும்.

    திராட்சை பழத்தின் விதைகள், அதன் தோல், பெர்ரி பழங்கள், வேர்கடலை போன்றவற்றில் “ரெஸ்விட்ரால்” (RESVETROL) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது ரத்த கொதிப்பை குறைக்கும், கொழுப்பை கட்டுப்படுத்தும். மூட்டு வலியை குறைக்கும், மூளைக்கு நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது. சால்மன் மீன்கள், சூரை மீன்களில் இருக்கும் ஒமேகா 3 பேட்டி ஆசிட் இதயத்தையும், மூளையையும் பாதுகாக்கும்.

    நமது மூளைக்கும், குடலுக்கும் தொடர்பு இருக்கிறது. “செர்ரோடினின்” என்ற வேதிப்பொருள் ஜீரண மண்டலத்தில் அதிகம் இருக்கின்றது. இது நரம்பு மண்டல செல்களில் உற்பத்தியாகும். இதன் அளவு குறைந்தால், மனக்கவலை, மனச்சோர்வு, ஞாபகமறதி, ஜீரணகோளாறு, தனிமைப்படுதல், தூக்கமின்மை, மறதி, மோகம் அதிகரித்தல் போன்ற மூளை மற்றும் உணர்வு சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். முட்டை, பாலாடை, அன்னாசிபழம், சால்மன் மீன், கடலை வகைகள், விதைகள், டோஃபு (TOFU) என்று சொல்லப்படுகின்ற சோயாதயிர் போன்றவற்றில் செர்ரோடினின் மூலக்கூறான டிரிப்டோபேன் (TRYPTOPHAN) அதிகம் உள்ளது. இந்த உணவு வகைகளை சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக வேலைசெய்யும். நம் உணர்வுகளும் சரியாக இருக்கும்.

    ‘காரம், வேகம், சோகம்’ ஆகிய மூன்றையும் தவிர்த்தாலே நம் உடலும், உள்ளமும், உணர்வும் ஆரோக்கியமாகிவிடும். பகவத் கீதையும் ‘யாரொருவர் தன்னுடைய உணவு பழக்கத்தையும், தன்னுடைய வேலைகளையும் முறைப் படுத்திக் கொள்கிறாரோ அவருக்கு மனதாலும், உணர்வாலும் துன்பம் வராது. யோகநிலையை அடைவார்’ என்கிறது.

    மனதை மயக்கும் மதுவை தவிர்த்து, உடலைக் கெடுக்கும் புகையை ஒழித்து மனதிற்கும், உடலிற்கும் நன்மை தரும் உணவை உண்டு நலமுடன் வாழ்வோமாக!!

    கட்டுரை: பேராசிரியர் டாக்டர்.சர்.இரா.இராமகிருஷ்ணன்,

    இதயநோய் நிபுணர், சென்னை.

    Next Story
    ×