search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மழைக்காலத்தில் உணவு விஷயத்தில் கவனம் தேவை
    X
    மழைக்காலத்தில் உணவு விஷயத்தில் கவனம் தேவை

    மழைக்காலத்தில் உணவு விஷயத்தில் கவனம் தேவை

    மழைக்காலத்தில் சமச்சீரான உணவு வகைகளை உட்கொள்வது நல்ல பலன் தரும். மழைக்காலங்களில் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு குடிநீர் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
    மழைக்காலத்தில் எண்ணெய்யில் வறுத்த, பொரித்த உணவு பொருட்களையும், சூடான டீ, காபியையும்தான் பலரும் விரும்புவார்கள். மழைக்காலத்தில்தான் மலேரியா, டெங்கு, டைபாய்டு, உணவு விஷமாக மாறுவது, வயிற்றுப்போக்கு, வைட்டமின் டி குறைபாடு மற்றும் சரும நோய்த்தொற்றுகளின் பாதிப்புகள் அதிகரிக்கும். சமச்சீரான உணவு வகைகளை உட்கொள்வது நல்ல பலன் தரும்.

    சீதோஷண நிலைக்கு ஏற்ப உணவுப்பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அப்படி செய்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். மழைக்காலங்களில் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு குடிநீர் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இந்த பருவத்தில்தான் நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பருக வேண்டும். குடிநீரை கொதிக்கவைத்து பருகுவது அதைவிட சிறந்தது.

    கோடை காலத்தில் மட்டுமல்ல மழைக்காலத்திலும் வியர்வை பிரச்சினை தலைதூக்கும். ஈரப்பதம் சார்ந்த பிரச்சினையும் உருவாகும். அவற்றை ஈடு செய்வதற்கு திரவ உணவுகளை உட்கொள்வது பாதுகாப்பானது. சூடான சூப்கள், இஞ்சி டீ, மூலிகை டீ, மசாலா சேர்க்கப்பட்ட குழம்பு வகைகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

    மழைக்காலத்தில் கிடைக்கும் பழங்களையும் தவறாமல் உட்கொள்ள வேண்டும். சுரைக்காய், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய் போன்றவை மழைக்காலங்களில் கிடைக்கும். இவை அனைத்தும் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தவை. எனவே அவற்றை தவறாமல் சாப்பிடுங்கள். நட்ஸ் வகைகள், தானியங்கள், மஞ்சள், இஞ்சி, பூண்டு, மிளகு, துளசி, புதினா, எலுமிச்சை போன்ற மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டவை. அவை பருவமழைக்கால நோய்களைத் தடுக்க உதவும்.

    மழைக்காலங்களில் ஒருசில உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. அவை நோய் பாதிப்புகளை அதிகரிக்கச்செய்யும் தன்மை கொண்டவை. பருவமழை காலத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை இரைப்பை, குடல் அமைப்பை பாதிக்கக்கூடும். எனவே இந்த பருவத்தில் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். தவிர்க்கமுடியாத பட்சத்தில் குறைவாக சாப்பிடலாம். எண்ணெய் பலகாரங்கள் தயார் செய்வதற்கு பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் சமையலுக்கு உபயோ கிக்கக்கூடாது. மழைக்காலங்களில் நீர்நிலைகள் மாசுபடுவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது. அதனால் கடல் உணவுகளையும், வெளி உணவுகளையும் கூடுமானவரை தவிர்த்துவிடுவது நல்லது.

    பருவமழை காலத்தில் மாறுபடும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக பச்சை இலை காய்கறிகளில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் வளர்ச்சி அடையக்கூடும். அதனால் காய்கறிகளை வாங்கி வந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடுவது நல்லது. அதிக வெப்பநிலையில் சமைத்து சாப்பிடுவதும் அவசியமானது.
    Next Story
    ×