search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    யோகாசன விதிமுறைகள் அறிந்து கொள்ளுங்கள்...
    X

    யோகாசன விதிமுறைகள் அறிந்து கொள்ளுங்கள்...

    • காலை, மாலை யோகாசனம், தியானம் செய்யுங்கள்.
    • பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் யோகாசனம் செய்யக் கூடாது.

    யோகாசனங்களை காலை 4 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்ளும் பயிலுங்கள். மதியமும் சாப்பிடும் முன் 12 மணி முதல் 1 மணிக்குள் செய்யலாம். பொதுவாக அதிகாலையில் பயிற்சி செய்வது நல்ல பலன் தரும்.

    காலை எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு நல்ல காற்றோட்டமுள்ள சுத்தமான இடத்தில் தரையில் ஒரு மேட், விரிப்பு விரித்து நிதானமாக பயிற்சி செய்ய வேண்டும்.

    ஆண்கள் டீ சர்ட், தளர்வான பேண்ட் , பெண்கள் சுடிதார் டீ சர்ட், அணிந்து பயிற்சி செய்யவும். கண்ணாடி அணிந்து, செல்போன் பையில் வைத்து, இறுக்கமான உடையணிந்து செய்யக்கூடாது

    பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் பயிற்சி செய்யக் கூடாது. கருவுற்ற பெண்கள் இரண்டு மாதம் வரை செய்யலாம். அதன்பின் தக்க ஆசானின் அறிவுரைப்படி பயிற்சி செய்யலாம்.

    காலையில் யோகாசனங்கள் செய்து விட்டு பத்து நிமிடம் கழித்து குளிக்கலாம். அல்லது குளித்துவிட்டு யோகாசனங்கள் செய்யலாம். எதாவது ஒன்றை கடைபிடியுங்கள்.

    எண்ணெய் தேய்த்து குளித்த அன்று யோகாசனங்கள் செய்ய வேண்டாம். காய்ச்சல், தலைவலி, இரவு தூக்கமில்லை என்றால் மறு நாள் யோகாசனம் செய்ய வேண்டாம்.

    யோகாசனங்கள் செய்து முடித்து இறுதியில் சாந்தி ஆசனம் செய்து நிறைவு செய்யுங்கள்.

    யோகாசனம் என்பது நமது உடலை ஆலயமாக்கி அதில் உள்ள ஐந்து அடுக்குகளில், ஒவ்வொரு அடுக்கையும் சுத்தமாக்கி ஐந்தாவது அடுக்கில் உள்ள ஆத்ம உயிர் சக்தியை உணர்வதற்கு பயன்படுகின்றது. யோகாசனம் என்பது வெறும் உடற்பயிற்சி அல்ல. உடல், மனதை ஆத்மாவுடன் இணைக்கும் தெய்வீக கலையாகும். நமது உடம்பில் ஐந்து அடுக்குகள் உள்ளன.

    முதல் அடுக்கு - அன்னமய கோசம்

    இரண்டாவது அடுக்கு - பிராணமய கோசம்

    மூன்றாவது அடுக்கு - மனோமய கோசம்

    நான்காவது அடுக்கு - விஞ்ஞானமய கோசம்

    ஐந்தாவது அடுக்கு - ஆனந்தமய கோசம்

    இந்த உடலில் ஐந்தாவது அடுக்கில் தான் இறை சக்தி உயிர்சக்தி மறைந்துள்ளது. யோகப்பயிற்சிகள் செய்பவர்களுக்கு ஐந்தாவது அடுக்கில் உள்ள உயிர் சக்தி இறையாற்றல் உடல் முழுவதும் நன்கு பரவி எல்லா அடுக்குகளில் உள்ள குறைகளை நீக்க வல்லது.

    இன்று சமுதாயத்தில் நீரழிவு, ரத்த அழுத்தம் கேன்சர் போன்ற நோய்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது. இருதய நோய் அதிகமாகின்றது. இவையெல்லாம் சரியாக வேண்டுமெனில் ஒவ்வொரு மனிதர்களும் யோகக்கலையை பயில வேண்டும். இதன் மூலம் மட்டுமே மேற்குறிப்பிட்ட நோய்கள் வராமல் குறைக்க முடியும், தினமும் காலை 4 மணிக்கு எழுந்து விடுங்கள்.

    காலைக் கடன்களை முடித்துவிட்டு கிழக்கு நோக்கி ஒரு விரிப்பு விரித்து அமருங்கள். கை சின் முத்திரையில் வைத்து (பெருவிரல் ஆள்காட்டி விரல் நுனியை இணையுங்கள். மற்ற மூன்று விரல்களும் தரையை நோக்கி இருக்கட்டும்.) கண்களை மூடி இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து இரு நாசி வழியாக மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள். பின் இயல்பாக நடக்கும் மூச்சை மட்டும் ஐந்து நிமிடங்கள் தியானிக்கவும்.

    பின் எளிமையான யோகாசனங்கள் ஐந்து பயிற்சி செய்யுங்கள். காலை 8 மணி முதல் 8 .30 மணிக்குள் டிபன் சாப்பிடுங்கள். நன்கு மென்று கூழாக்கி சாப்பிடவும். மதியம் 12.30 முதல் 1.30 மணிக்குள் சாப்பிடுங்கள். இரவு சாப்பாடு 7.30 மணி முதல் 8 மணிக்குள் சாப்பிடுங்கள். இரவு மட்டும் அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று போக இடம் இருக்கட்டும். இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை நல்ல தூக்கம் இருக்க வேண்டும்.

    நேரம் உள்ளவர்கள் காலை, மாலை யோகாசனம், தியானம் செய்யுங்கள். எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது மெதுவாக மூச்சை இழுத்து மெதுவாக மூச்சை வெளியிடுங்கள். மூச்சில் கவனம் செலுத்துங்கள். எல்லோரிடமும் அன்பாக பழகுங்கள். எளிமையான வாழ்க்கை, உயர்ந்த எண்ணமுடன் வாழுங்கள்.

    நமது முதல் உணவு காலையில் உடலுக்கு யோகாசனம், உள்ளத்திற்கு உணவு - தியானம், இதுவே சற்குரு சீரோ பிக்க்ஷு உடம்பிற்கோர் மருந்து நல்ல உழைப்பு (யோகாசனம்) உள்ளத்திற்கோர் நல்ல மருந்து நல்ல நினைப்பு (தியானம்) என்றார்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    Next Story
    ×