search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சமுதாய தொண்டுகளில் மாணவர்களின் பங்கு
    X
    சமுதாய தொண்டுகளில் மாணவர்களின் பங்கு

    சமுதாய தொண்டுகளில் மாணவர்களின் பங்கு

    நாட்டுக்கு நாம் செய்யும் தொண்டு நமக்கு நாமே செய்து கொள்ளும் தொண்டாகும். எனவே சமுதாய தொண்டுகளில் மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை தேடித்தர வேண்டும்.
    நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும் என்றார் அமெரிக்க நாடடு அதிபர் ஜான்கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். உங்கள் எண்ணங்கள் சிறந்தனையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழ வேண்டும்.

    இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும். முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். படிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் பெற்றோருக்கு உதவுதல் அதாவது வீட்டு வேலைகளை செய்தல், கிராமங்கள் என்றால் ஓய்வு வேளையில் வயல்களுக்கு சென்று தந்தைக்கு உதவுதல் போன்றவைகளில் இன்றைய மாணவர்கள் ஈடுபடுதல் அவசியம்.

    மனித நேயம் வளர மாணவர்கள்தான் சீரிய முறையில் பாடுபடவேண்டும். சமூக தொண்டுகளில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும். சமூக தொண்டுகளில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தால் நிச்சயமாக ஒவ்வொரு கிராமமும் சிறந்து விளங்கும். தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வீரர்களின் ஆலோசனைப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடவேண்டும். மூட பழக்க வழக்கங்களை ஒழிக்க மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சமுதாய தொண்டாற்றினால் வெற்றி பெறுவது உறுதி. கிராமங்களில் உள்ள முட்புதர்களை வெட்டி அழிக்க வேண்டும்.

    குளம், குட்டைகளை தூரிவாரியும் ஆழப்படுத்தலாம். இதன் மூலம் மழை பெய்யும் போது மழை நீரை சேமிக்க முடியும். வயதானவர்கள், கண் பார்வையற்றவர்கள் சாலையை கடக்க முற்படும்போது நாம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு சேமிப்பின் அவசியம் குறித்து எடுத்து கூறவேண்டும். விவசாயிகளிடம் அவர்களுக்கு அறியாத வேளாண் தொழில்நுட்பங்களை விளக்கி கூறி பயிர் விளைச்சலுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். தங்கள் பகுதியில் கழிவுநீர் தேங்குவதாலும், குப்பைகளை சாலையில் கொட்டுவதாலும் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    மாணவர்கள் பொழுதுபோக்கு நேரத்தை வீணடிக்காமல் சமுதாய பணிகள் செய்வதில் ஈடுபட்டால் தேவையில்லாத வீண்பிரச்சினைகளில் சிக்காமல் நல்வழியில் செல்வதற்கு வழிவகுக்கும். இன்னும் சில மாணவர்கள் தங்கள் படிக்கும் நேரம் போக மீதி நேரத்தில் செல்போனில் இணையதளம் மூலம் கழிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை. மாறாக சமூக விரோத செயல்களில் ஈடுபட மாணவர்களை தூண்டுகிறது. இதனால் அவர்கள் வாழ்க்கை சீர்கேடாகிறது. இளம் வயதில் படித்து முன்னேறாமல் தவறான எண்ணங்கள் தோன்றி திசை மாறி செல்கின்றனர்.

    எனவே மாணவர்களாகிய நீங்கள் வருங்காலத்தில் சிறந்து விளங்குவதற்கு அறிவு செல்வத்தை தேடி செல்லவேண்டும். இளம் பருவத்தில் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுங்கள். நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையான புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிவதில் ஆர்வம் காட்ட மாணவர்கள் முயல வேண்டும். நாட்டுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று மாணவர்கள் எண்ணி செயலாற்ற வேண்டும். ஏனென்றர்ல் மாணவர்களை நம்பித்தான் வருங்காலம் இருக்கிறது.

    இதனை ஒரு போதும் மறக்கலாகாது. நாட்டுக்கு நாம் செய்யும் தொண்டு நமக்கு நாமே செய்து கொள்ளும் தொண்டாகும். ஏனென்றால் நாம் இல்லாமல் நாடு இல்லை. சிறு துளி பெரு வெள்ளம் போல் நாம் ஒவ்வொரு வரும் செய்யும் சிறு தொண்டு பெரு தொண்டாய் நாட்டை வளப் படுத்தும். எனவே சமுதாய தொண்டுகளில் மாணவர்களும், இளைஞர்களும் ஈடுபட்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை தேடித்தர வேண்டும்.
    Next Story
    ×