search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்
    X

    உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை படத்தில் காணலாம்.

    உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    • இந்த கோவில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

    ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ராமநாதபுரம் சமஸ்தான மற்றும் தேவஸ்தான தர்மகர்த்தா ராணி பிரம்ம ராஜேஸ்வரி நாச்சியாருக்கு பாத்தியப்பட்ட உப்பூர் வெயில் உகந்த விநாயகர் கோவில் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலில் உள்ள வெயில் உகந்த விநாயகரை ராமபிரான் சீதையை மீட்க இலங்கைக்கு செல்லும் வழியில் பூஜித்து சென்றதாக ராமாயண புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    மிக பழமையான இந்த கோவிலில் விநாயகர் வேண்டியவருக்கு வேண்டிய வரத்தை அளிப்பதாக பக்தர்களின் நம்பிக்கை. மிகவும் பிரசித்திபெற்ற இக்கோவிலின் முன்புறம் மணி மண்டபம் சில லட்சங்கள் மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டு மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    விழா கடந்த 5-ந் தேதி முதல்கால யாக பூஜையுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 7.45 மணிக்கு 6-ம் கால யாக பூஜை தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.45 மணிக்கு மகாபூர்ணகுதி நடைபெற்று 10.45 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, கருடன் வானில் வட்டமிட காலை 11.20 மணிக்கு ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை தர்மகர்த்தா ராணி பிரம்மகிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியார், ராமநாதபுரம் ராஜா நாகநாத சேதுபதி, தேவகோட்டை ஜமீன்தார் நாராயணன் செட்டியார், திவான் பழனிவேல் பாண்டியன், உப்பூர் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், குமரய்யா அம்பலம், விழா கமிட்டியினர் முன்னிலையில் கோவிலின் ராஜகோபுரம், விமானம் மற்றும் உப சன்னதிகளின் கலசங்களிலும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த விழாவில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

    மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், விநாயகர், சித்தி, புத்தி தெய்வங்களுடன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், சாமி வீதிஉலாவும் நடந்தது. தொடர்ந்து உலக நன்மைக்காக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழா ஏற்பாட்டை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×