search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வைகுண்ட ஏகாதசி விழா: உறையூர் நாச்சியார் கோவிலில் இன்று தீர்த்தவாரி
    X

    வைகுண்ட ஏகாதசி விழா: உறையூர் நாச்சியார் கோவிலில் இன்று தீர்த்தவாரி

    • இன்று வீணை வாத்தியம் கிடையாது.
    • நாளை இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலானது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். 108 வைணவ தலங்களில் 2-வது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.

    இக்கோவிலில் திருமொழி, திருவாய் மொழி திருநாள் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் 15-ந்தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தலும், இரவு 8 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்தகோஷ்டியும், இரவு 8.30 மணி முதல் இரவு 9 மணி வரை பொது ஜன சேவையும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு கடந்த 16-ந்தேதி மாலை நடைபெற்றது. அன்று முதல் நேற்று வரை மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து தாயார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு பரமபத வாசல் வந்தடைந்தார். மாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    நேற்று மாலை 6.45 மணி முதல் இரவு 8.45 மணி வரை ஹிரண்யவதம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 9.15 மணி வரை தீர்த்த கோஷ்டியும், 9.45 மணி வரை பொதுஜன சேவையும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவு 10.45 மணி அளவில் வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுகிறார். தொடர்ந்து பரமபதவாசல் திறக்கப்பட்டு மாலை 4.15 மணிக்கு திருவாய்மொழி மண்டபம் வந்து சேருகிறார். அங்கு திருமஞ்சனம், திருவாய் மொழி திருநாள் சாற்றுமறை நடைபெறும். இரவு 11.15 மணிக்கு ஆழ்வார் ஆசார்யர் மரியாதையாகி மூலஸ்தானம் சென்றடைகிறர். இன்று வீணை வாத்தியம் கிடையாது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) இயற்பா சாற்றுமறையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதையொட்டி நாளை மாலை 5 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இயற்பா தொடக்கமும், மாலை 5.15 மணி முதல் இரவு 7.45 மணிவரை இயற்பா பிரபந்தம் சேவித்தல், திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல் நடக்கிறது. இரவு 7.45 மணி முதல் 8.30 மணி வரை இயற்பா சாற்றுமறை திருத்துழாய் தீர்த்த வினியோகம் நடக்கிறது.

    Next Story
    ×