என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி தீர்த்தமும்... நீராடுவதன் பலனும்...
    X

    திருப்பதி தீர்த்தமும்... நீராடுவதன் பலனும்...

    • ஆதிவராக மூர்த்தி சன்னிதிக்கு அருகில் சுவாமி புஷ்கரணி தீர்த்தம் உள்ளது.
    • தினந்தோறும் அதிகாலையில் ஆகாச கங்கை தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

    ஏழுமலையான் என்று அழைக்கப்படும் திருப்பதி வெங்கடாஜலபதி வீற்றிருக்கும், திருமலையில் ஏராளமான புனிதத் தீர்த்தங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில தீர்த்தங்களைப் பற்றியும், அதில் நீராடுவதன் பலனையும் பார்க்கலாம்.

    சுவாமி புஷ்கரணி

    ஆதிவராக மூர்த்தி சன்னிதிக்கு அருகில் இந்த தீர்த்தம் உள்ளது. இதனை 'தீர்த்தங்களின் அரசி' என்று அழைக்கிறார்கள். இங்கு சரஸ்வதிதேவி தவம் இயற்றியதாக தல புராணம் சொல்கிறது. மிகவும் புனிதத்துவம் பெற்ற தீர்த்தம் இது. மார்கழி மாதம் வளர்பிறையில் துவாதசி நாளில் சூரிய உதயத்திற்கு 6 நாழிகை முன்பிருந்து, சூரிய உதயத்திற்கு பின்பான 6 நாழிகை வரை திருப்பதி மலையில் உள்ள அனைத்து தீர்த்தங்களும், இந்த தீர்த்தத்தில் கூடுகின்றன. எனவே அன்றைய தினம் இதில் நீராடி வழிபட்டால் இறைவனின் திருவடியை அடையலாம்.

    குமார தீர்த்தம்

    மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசி பவுர்ணமி), சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. மனதிற்கு உற்சாகமும், உடலுக்கு இளமையும் தரும் இத்தீர்த்தத்தில் நீராடுபவர்கள், ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுவர்.

    தும்புரு தீர்த்தம்

    இறைவனை தன்னுடைய நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர், திருப்பதி வெங்கடாஜலபதியை நினைத்து தவம் இருந்த இடத்தில் இருப்பதால் இதற்கு 'தும்புரு தீர்த்தம்' என்று பெயர். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பவுர்ணமி), இதில் நீராடுவோருக்கு இறைவன் அடியைச் சேரும் பாக்கியம் உண்டு.

    ஆகாச கங்கை

    தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சகல பாவங்களையும் போக்கும் இத்தீர்த்தத்தின் அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில் வேங்கடவனுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்துக்கொண்டு நடந்தே வருவாராம். கோவிலில் இருந்து சுமார் 2 மைல் தூரம் நடந்து வரும் இவரின் பக்தியை மெச்சி, அவருக்கு பெருமாள் காட்சி கொடுத்தார். சகல சித்திகளையும் அளிக்கும் இத்தீர்த்தத்தில் சித்திரை மாதம் பவுர்ணமியன்று நீராடுவது மிகச் சிறப்பு.

    பாண்டு தீர்த்தம்

    வைகாசி மாதம் வளர்பிறை துவாதசியுடன் கூடிய செவ்வாய்க்கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால், அந்த நாளில் இந்த தீர்த்தத்தில் நீராடுவது விசேஷம். இதனால் சகல பாவங்களில் இருந்தும் விடுபடலாம்.

    பாபவிநாசன தீர்த்தம்

    இத்தீர்த்தம் இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. மிக்க சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியும், உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய தினத்தில் இதில் நீராடுவோர் ஞானம் பெறுவதுடன், பாவங்களில் இருந்து விடுபடுகின்றனர்.

    Next Story
    ×