search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது
    X

    திருப்பதி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது

    • தோஷ நிவர்த்திக்காக ஆண்டு தோறும் பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.
    • ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ரத்து

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் 450-க்கும் மேற்பட்ட உற்சவங்கள் நடக்கிறது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்கிறார்கள். பூஜை முறைகளில் அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக ஆண்டு தோறும் பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான 3 நாள் பவித்ரோற்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று பவித்ர பிரதிஷ்டை நடந்தது. முன்னதாக உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியை கோவிலில் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள யாக சாலைக்குக் கொண்டு வரப்பட்டார்கள். அங்கு ஹோமம், காரியக்கர்மங்கள் நடந்தது. சம்பங்கி பிரகாரத்தில் காலை 9 மணியில் இருந்து காலை 11 மணி வரை உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள் மற்றும் சுகந்த வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதையடுத்து மாலை 4 மணியளவில் உற்சவர்களுக்கு சிறப்பு சமர்ப்பணம் செய்யப்பட்டது. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து பிரத்யேக ஆபரணங்களால் உற்சவர்களுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் இரவு 8 மணியில் இருந்து இரவு 11 மணி வரை யாகசாலையில் காரியக்கர்மங்கள் நடந்தது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பெரிய, சின்ன ஜீயர்கள், தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பவித்ரோற்சவத்தால் நேற்று கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×