search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பனிமயமாதாவின் தங்கத்தேர்: ஆகஸ்டு 5-ந்தேதி தேரோட்டம்
    X

    'பனிமயமாதா'வின் தங்கத்தேர்: ஆகஸ்டு 5-ந்தேதி தேரோட்டம்

    • ஆலய திருவிழா 26-ந் தேதி தொடங்கி 11 நாட்கள் நடைபெறும்.
    • ஆலய வளாகத்தில் தங்கத்தேர் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    முத்துநகரான தூத்துக்குடி மாநகரில் அமைந்து உள்ள பனிமயமாதா ஆலயம் உலக பிரசித்தி பெற்றது ஆகும். சாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் வழிபடும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சமூக நல்லிணக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆலய திருவிழா ஜூலை மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 11 நாட்கள் நடைபெறும்.

    இதில் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள். விழாவின் சிகர நாளான ஆகஸ்டு 5-ந்தேதி நடைபெறும் அன்னையின் தங்கத்தேர் பவனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவார்கள். சில ஆண்டுகளில் முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கும் வகையில், ஆலய திருவிழாவின் சிகர நாளில் அன்னையின் தங்கத்தேரோட்டம் நடத்தப்படும்.

    அதன்படி, தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு தங்கத்தேரோட்டம் நடத்தப்படுகிறது. இதற்காக ஆலய வளாகத்தில் தங்கத்தேர் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று பனிமயமாதாவுக்கு தங்கமுலாம் பூசும் பணிகளும் நடக்கிறது.

    இதுகுறித்து தூத்துக்குடி பனிமயமாதா ஆலய பங்குதந்தை குமார் ராஜா கூறியது:-

    தூத்துக்குடியில் கடந்த 468 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம், பரதர்குல மக்களின் சரித்திர வரலாற்றில் முக்கிய இடம் பிடித்து உள்ளது. அது பரதகுலத்தாய் என்று அழைக்கப்படும் சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா, தூத்துக்குடி மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட காலம் ஆகும். கடந்த 1532 முதல் 1537-ம் ஆண்டு வரையிலும் முத்துக்குளித்துறையின் பரதவர் இனத்தினர் பெருமளவில் கத்தோலிக்க திருமறையை தழுவினர். தொடர்ந்து 1538-ம் ஆண்டு புனித பேதுரு ஆலயம் முதலாவது பங்கு ஆலயமாக உருவானது. பேதுரு கொன்சால்வஸ் முதல் பங்குதந்தையாக பணியாற்றினார்.

    1542-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றி உள்ள கடற்கரை கிராம மக்களால் 'ஞானதகப்பன்' என்று அழைக்கப்படும் புனித பிரான்சிஸ் சவேரியார் இங்கு வந்து மக்களுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தை போதித்து அவர்களை வேதத்தில் உறுதிப்படுத்தினார். இப்பகுதி மக்களுக்காக பிலிப்பைன்சில் உள்ள மணிலா தீவில் கன்னியர் மடத்தில் இருந்த அன்னையின் சொரூபத்தை புனித பிரான்சிஸ் சவேரியார் கேட்டார். அவர் 'இதோ உங்களது தாய்' என்று மக்களுக்கு பனிமயமாதாவை சுட்டிக் காண்பித்தார்.

    அன்னையின் சொரூபம் கடந்த 9-6-1555 அன்று சந்தலேனா என்ற கப்பல் மூலம் தூத்துக்குடியை வந்தடைந்தது. இந்த தாய் வேம்பார், வைப்பார், தூத்துக்குடி, புன்னக்காயல், வீரபாண்டியன்பட்டினம், திருச்செந்தூர், மணப்பாடு ஆகிய 7 பெரிய கடற்கரை கிராமங்களின் தாயாக விளங்கியதால், 'ஏழுகடல் துறையின் ஏக அடைக்கலத்தாய்' என்று அழைக்கப்படுகிறார்.

    1582-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி இரக்கத்தின் மாதாவின் ஆலயம் கொச்சி பிஷப் தவோரா ஆண்டகையால் கிரகோப் தெருவில் திறக்கப்பட்டது. இந்த ஆலயம் நாளடைவில் செயிண்ட் பவுல் ஆலயம் என்றும், பின்னர் பனிமயமாதா ஆலயம் என்றும் அழைக்கப்பட்டது. 1658-ம் ஆண்டு டச்சுக்காரர்கள் தூத்துக்குடியை கைப்பற்றினார்கள். கத்தோலிக்கர்களை துன்புறுத்தி ஆலயங்களை வாணிப சாவடிகளாகவும், ஆயுத கிடங்குகளாகவும் மாற்றினார்கள்.

    தூத்துக்குடி மக்கள் பரிசுத்த பனிமயமாதாவின் சொரூபத்தை பல சிறிய ஊர்களுக்கு எடுத்து சென்று மறைத்து வைத்தனர். டச்சுக்காரர்களின் தொல்லை ஓய்ந்ததும் சொரூபத்தை மீண்டும் தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர்.

    கடந்த 1707-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி திருமந்திரநகராம் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை தாக்கிய கொடிய கோடை மின்னலை தாய் தன் மீது தாங்கிக்கொண்டு மக்களை காத்தருளினார். சேதாரம் ஏதும் இன்றி அன்னையின் திருச்சொரூபம் கருநீல வண்ணமானது. அன்னையின் திருவுருவம் மீது படிந்து இருந்த கறைகளால் கலக்கமுற்ற இறைமக்கள் தொடர்ந்து 40 நாட்கள் பரிகார பக்தி முயற்சிகளில் ஈடுபட்டனர்.

    இறுதிநாள் செபத்தில் கலந்துகொண்ட ஏசுசபை மாநில தலைவர், முடிவில் பக்தியோடு தாயின் மேனியை வெண்ணிற துணியால் துடைக்க, அற்புதமாக கறைகள் அகன்று முற்றிலும் வடுக்களற்ற, முன்பைவிட பிரகாசமாக அன்னையின் திருச்சொரூபம் தெய்வீக களையோடு சாந்தமே உருவான அருள்பாலிக்கும் தாய்மை உருவை பெற்றது.

    அதன்பிறகு தற்போது அமைந்துள்ள பெரிய கோவிலுக்கு கடந்த 1712-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ந் தேதி விஜிலியுஸ் மான்சியால் அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு 1713-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி அன்னையின் புதிய ஆலயம் திறக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு காலத்தில் ஆலய புதிய கட்டிடங்கள் மாற்றம் செய்யப்பட்டன. இதனால் தற்போது ஆலயத்தின் தோற்றம் ஒருபுறத்தில் கோத்திக் கோபுரமாகவும், மறுபுறம் தேர்வடிவ கோபுரமாகவும், முகப்பு, முன்மண்டபங்கள் வேறு பாணி என்று பல்வேறு கட்டிடக்கலை பாணிகளை உள்ளடக்கி பறைசாற்றும் கூட்டு கட்டிடக்கலை கண்காட்சி சின்னமாக ஆலயம் நிமிர்ந்து நிற்கிறது.

    1834-ம் ஆண்டு சூசைநாதர் முயற்சியால் அன்னையின் ஆலயத்தில் வெண்சலவை கல்பீடம் அமைக்கப்பட்டது. 1895-ம் ஆண்டு இந்த பேராலயம் மயிலை மறைமாவட்ட ஆளுகையின் கீழ் ஒப்படைக்கப்பட்டது. 1922-ம் ஆண்டு மாதா கோவில் கோபுரம் கட்டப்பட்டது. 1923-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கிய தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஆளுகையின் கீழ் 1930-ம் ஆண்டு பனிமயமாதா ஆலயம் ஒப்படைக்கப்பட்டது.

    1960-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி தூத்துக்குடி ஆயர் தாமஸ் பர்னாந்து, பங்குத்தந்தை எஸ்.எம்.தல்மெய்தா முயற்சியாலும், பரிந்துரையாலும் உரோமை மேரி மேஜர் பேராலயத்துடன் இணைப்பு பேராலயமாக திருத்தந்தை 23-ம் அருளப்பரால் பிரகடனப்படுத்தப்பட்டது. 30-7-1982 அன்று தூய பனிமயமாதா ஆலயமானது பேராலயம் என்ற சிறப்பு நிலைக்கு உயர்த்தப்பட்டது.

    கடந்த 1806-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முதன் முதலாக தங்கத்தேரில் அன்னை நகரில் பவனி வந்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக முக்கிய விழாக்களை மையமாக கொண்டு தங்கத்தேரோட்டம் நடந்தது. பனிமயமாதா ஆலயத்துக்கு சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் வந்து வழிபட்டு செல்கின்றனர். அன்னையின் திருவிழா ஆண்டுதோறும் சமய நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது. தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த ஆண்டு தங்கத்தேரோட்டம் நடக்கிறது. இது 16-வது முறையாக நடைபெற உள்ள தங்கத்தேரோட்டம் ஆகும். அன்று பனிமயமாதா தங்கத்தேரில் எழுந்தருளி நகரை வலம் வருகிறார். இதனை முன்னிட்டு தங்கத்தேரை எழில்மிகு கலைநயத்துடன் அலங்கரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பனிமய மாதாவின் தங்கத்தேர் :

    தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் தங்கத்தேரோட்டம் ஆலயத்தின் முக்கிய நிகழ்வுகளை பறைசாற்றும் வகையில் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த 2-2-1806-ம் ஆண்டு பனிமய மாதாவின் அற்புத சொரூபம் தூத்துக்குடி வந்தடைந்த 250-வது ஆண்டு நிறைவாக முதல்முறையாக தங்கத்தேரோட்டம் நடந்தது. 1872, 1879, 1895-ம் ஆண்டு முறையே 2, 3, 4-வது தங்கத்தேரோட்டம் வளமையான தேரோட்டமாக நடந்தது.

    1905-ம் ஆண்டு முதலாவது தங்கத்தேரின் 100-வது ஆண்டின் நினைவாக 5-வது தங்கத்தேரோட்டம் நடந்தது. அதன்பிறகு 1908, 1926, 1947-ம் ஆண்டுகளில் 6, 7, 8-வது தங்கத்தேரோட்டம் நடந்தது. 1955-ம் ஆண்டு பனிமயமாதாவின் அற்புத சொரூபம் திருமந்திரநகருக்கு வந்தடைந்த 400-ம் ஜூபிளி ஆண்டு நினைவாக 9-வது தங்கத்தேரோட்டம் நடந்தது.

    1964-ம் ஆண்டு தாமஸ் பர்னாந்து ஆண்டகை குருத்துவ வெள்ளி விழா நினைவாக 10-வது தங்கத்தேரோட்டமும், 1977-ம் ஆண்டு பாத்திமாபதியில் நம் தேவ அன்னை காட்சி கொடுத்த 60-ம் ஆண்டு நினைவாக 11-வது தங்கத்தேரோட்டமும், 1982-ம் ஆண்டு இரக்கத்தின் மாதா கோவில் கட்டப்பட்ட 400-ம் ஆண்டு நினைவாக 12-வது தங்கத்தேரோட்டமும், 2000-ம் ஆண்டு ஏசுகிறிஸ்து பிறந்த 2000-ம் ஆண்டு நினைவாக 13-வது தங்கத்தேரோட்டமும், 2007-ம் ஆண்டு முதல் தங்கத்தேரின் 200-வது ஆண்டு நிறைவு, பசலிக்கா பிரகடனத்தின் 25-வது ஆண்டு நிறைவு மற்றும் இரக்கத்தின் மாதா கோவில் கட்டப்பட்ட 425-வது ஆண்டு நினைவாக 14-வது தங்கத்தேரோட்டமும் நடந்தது. 2013-ம் ஆண்டு திவ்விய சந்தமரிய தஸ்நேவிஸ் மாதா பேராலய 431-ம் ஆண்டு திருவிழா மற்றும் பேராலயம் எழுப்பப்பட்டதன் 300-ம் ஆண்டு நினைவாக 15-வது தங்கத்தேரோட்டம் நடந்தது.

    53 அடி உயர தங்கத்தேர் :

    இந்த ஆண்டு தேரோட்டத்துக்கான தங்கத்தேரின் ஒவ்வொரு வடிவமைப்பும் பல வரலாறுகளை கூறும் வகையில் அமைந்து உள்ளது. அன்னையின் மங்கள மாலையான ஜெபமாலையை நினைவுகூரும் வகையில் 53 அடி உயரத்தில் தங்கத்தேர் அமைக்கப்பட்டு உள்ளது.

    பொதுவாக மற்ற ஆலயங்களில் நடைபெறும் தேரோட்டத்தில் பீடத்தில் உள்ள சொரூபத்தை தேரில் எடுத்து செல்வது கிடையாது. ஆனால் பனிமயமாதா ஆலயத்தில் அன்னையின் சொரூபம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனியாக கொண்டு வரப்படுகிறது. இந்த தேரின் மேல் பகுதியில் ஒரு நட்சத்திரம் அமைக்கப்பட்டு உள்ளது. இது அன்னை கடலின் நட்சத்திரம் என்பதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

    அன்னையை சுற்றிலும் 9 கோள்கள் இருப்பதை குறிக்கும் வகையில், அன்னையை சுற்றி 9 மீன்கள் உள்ளன. மேலும் அன்னைக்கு தங்க கிரீடமும் அணிவிக்கப்பட்டு உள்ளது. பனிமயமாதா பூமி மற்றும் ஆகாயத்தின் ராணி என்பதை குறிக்கும் வகையில் இந்த கிரீடம் அமைக்கப்பட்டு உள்ளது. 12 அப்போஸ்தலர்களை குறிக்கும் விதத்தில் தேரில் 12 தூண்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 6 சக்கரங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    தங்கத்தேரின் 4 மூலைகளிலும் 4 கிளிகள் உள்ளன. அதேபோன்று மீனவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மனித தலையும், மீன் உடலும் கொண்ட கடல்கன்னிகளின் உருவமும், 2 காளைகளும் பொருத்தப்பட்டு உள்ளன. தேர் முழுவதும் பல்வேறு ரத்தின கற்களாலும், சிற்பங்களாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. இந்த தங்கத்தேரில் ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி பனிமய அன்னை தூத்துக்குடி நகரில் வலம் வருகிறார். அவரை கண்டு அருளாசி பெறுவதற்கு எண்ணற்ற மக்கள் காத்திருக்கின்றனர்.

    Next Story
    ×