search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா இன்று தொடங்குகிறது

    • ஐப்பசி திருவிழா இன்று தொடங்கி நவம்பர் 1-ந்தேதி 10 நாட்கள் நடக்கிறது.
    • 31-ந் தேதி சாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் நடைபெறும்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி ஐப்பசி திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி வரை நடக்கிறது.

    முதல் நாளான இன்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு பூஜைகள், சாமி வாகனத்தில் பவனி வருதல் போன்றவை நடக்கிறது.

    24-ந் தேதி இரவு 9 மணிக்கு சாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், 10 மணிக்கு ருக்மணி சுயம்வரம் கதகளியும், 25-ந் தேதி காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், இரவு 9 மணிக்கு கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், 10 மணிக்கு தட்ச யாகம் கதகளியும் நடைபெறும்.

    26-ந் தேதி இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், 9.30 மணிக்கு சாமி பல்லக்கில் பவனி வருதல், 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளியும், 27-ந் தேதி இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றம், தொடர்ந்து கருட வாகனத்தில் சாமி பவனி வருதல், நள சரிதம் கதகளியும், 28-ந் தேதி இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 9 மணிக்கு சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதலும், 29-ந் தேதி இரவு 9 மணிக்கு சாமி பல்லக்கில் பவனி வருதல், தொடர்ந்து துரியோதன வதம் கதகளியும் நடக்கிறது.

    30-ந் தேதி இரவு 9 மணிக்கு பாலிவதம் கதகளி, 31-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, 9.30 மணிக்கு சாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் போன்றவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான வருகிற 1-ந் தேதி காலை 6 மணிக்கு ராமாயண பாராயணம், 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், இரவு 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி, கருட வாகனத்தில் சாமி ஆராட்டுக்கு தளியல் ஆற்றுக்கு எழுந்தருளல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

    Next Story
    ×