search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
    X

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

    • அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • 8-ந் தேதி தைலக்காப்பு உற்சவம் தொடங்குகிறது.

    கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாத சாமி கோவில் உள்ளது. 108 வைணவ தளங்களில் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி கடந்த 23 ந்தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது.

    நேற்று 1-ந் தேதி பகல்பத்து உற்சவம் முடிவடைந்தது. இன்று 2-ந் தேதி (திங்கட்கிழமை) வைகுண்ட ஏகாதசி நாளையொட்டி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து சொர்க்கவாசல் (பரமபத வாசல்) முன்பு மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டது. இதைமுன்னிட்டு அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைதொடர்ந்து முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

    இதன் பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாதசாமி சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) வழியாக எழுந்தருளினார். அப்போது தேசிகர் எதிர்சேவை நடைபெற்றது. அதிகாலை 2 மணி முதல் திரளாக திரண்டிருந்த பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா" என பக்தி கோஷங்களை எழுப்பி தேவநாதசுவாமியை தரிசித்தனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்புக்காக, இன்ஸ் பெக்டர் வனிதா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    இதனை தொடர்ந்து தேவநாதசாமி வெளிப் பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து மூலவரை தரிசிக்க பொதுமக்களை அனுமதித்தனர்.

    பின்னர் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டு சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று இரவு முதல் ராப்பத்து உற்சவம் வெகு விமர்சையாக தொடங்க உள்ளது. மேலும் ஜனவரி 8-ந் தேதி தைலக்காப்பு உற்சவம் தொடங்குகிறது. விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தி னர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×