search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனி ஊஞ்சல் திருவிழாகாப்பு கட்டுதலுடன் இன்று தொடங்குகிறது
    X

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனி ஊஞ்சல் திருவிழாகாப்பு கட்டுதலுடன் இன்று தொடங்குகிறது

    • 3-ந்தேதி முப்பழ பூஜை நடக்கிறது.
    • இன்று முதல் 3-ந்தேதி வரை தங்க ரதம் உலா ரத்து செய்யப்பட்டுள்ளது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு கொண்ட திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஊஞ்சல் திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆனி ஊஞ்சல் திருவிழா இன்று சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவையொட்டி உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது.

    பின்னர் அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு தயாராகும் ஊஞ்சலில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 2-ந்தேதி வரை 9 நாட்கள் தினமும் 6 மணிக்கு ஊஞ்சலில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 3-ந்தேதி முப்பழ பூஜை நடக்கிறது. விழாவையொட்டி கோவிலின் கருவறையில் உள்ள முருகப்பெருமான், சத்யகிரீஸ்வரர், கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்பாள் ஆகிய 5 சன்னதிகளிலுமாக சுவாமி, அம்பாளுக்கு வாழை, மா, பலா, ஆகிய முப்பழங்கள் படைத்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் மற்றும் சிவாச்சாரிகள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சித்திரை திருவிழாவில் திருக்கல்யாணத்தின்போதும், ஆவணி மாதத்தில் நடைபெறும் புட்டுத்திருவிழாவின் போதும் உற்சவர், தெய்வானையுடன் கோவிலுக்கு சென்று வருவதால் திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் தங்கரதம் உலா நடைபெறுவதில்லை. ஆனி ஊஞ்சல் திருவிழாவின்போது கோவிலுக்குள்ளே சுவாமி இருந்த போதிலும் தங்க ரதம் வலம் வரக்கூடிய திருவாச்சி மண்டபத்தில் ஊஞ்சல் அமைக்கப்படுவதால் இன்று முதல் 3-ந்தேதி வரை 10 நாட்கள் தங்க ரதம் உலா ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×