search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் மாசி தெப்ப உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் மாசி தெப்ப உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • 6-ந்தேதி வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் சுவாமி தெப்பக்குளத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • தெப்பக்குளத்தை சுற்றிலும் அகல்விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

    108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்றானது திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில். சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத தெப்பத்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் 25-ந்தேதி மாலை 6 மணிக்கு சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 7.35 மணிக்கு பெருமாள் கருங்கல் மண்டபத்தில் எழுந்தருளி தீபாராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து காப்புகட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்று காலை 10.40 மணிக்கு பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்திற்கு கொடி ஏற்றப்பட்டு திருமஞ்சனம், சந்தனம், பால் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

    நேற்று இரவு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் தங்க பல்லக்கில் திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி தினந்தோறும் காலை சுவாமி புறப்பாடும், இரவு சிம்மம், அனுமன், கருடன், சேஷன், குதிரை, அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 7-ம் திருநாள் மாலை சூர்ணாபிஷேகம், தங்கப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    6-ந்தேதி வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் சுவாமி தெப்பக்குளத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், தங்க பல்லக்கில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. 7-ந்தேதி தெப்ப உற்சவ திருநாள் அன்று காலை பகல் தெப்பமும், இரவு 8.30 மணிக்கு இரவு தெப்பமும் நடக்கிறது.

    விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி தெப்பக்குளத்தை சுற்றிலும் அகல்விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறும். மறுநாள் காலையில் சக்கரத்தாழ்வாருக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும், இரவு சுவாமி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகிநாச்சியார் தலைமையில் மேலாளர் இளங்கோ கண்காணிப்பாளர் சேவர்கொடியான் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×