search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பெண்ணாடம் அருகே திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்
    X

    தீமிதி திருவிழா நடந்த போது எடுத்த படம்.

    பெண்ணாடம் அருகே திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா: திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன்

    • கருட வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பெண்ணாடம் அருகே இறையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 24-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு திருமஞ்சனம் மற்றும் மகாபாரத சொற்பொழிவு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் பகவானுக்கு அன்னம் அளித்தல், திருக்கல்யாண உற்சவம், அர்ஜூனன் தபசு, விதுரர் விருந்து, கரகத்திருவிழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து கோவில் அருகே அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் திரளான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பின்னர் கருட வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. நேற்று கோவிலில் தர்மர் பட்டாபிஷேகம், அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், மஞ்சள் நீராட்டு, சாமி வீதிஉலா உள்பட பல்வேறு நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. இதில் துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×