search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா 5-ந்தேதி நடக்கிறது
    X

    வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா 5-ந்தேதி நடக்கிறது

    • இன்று முதல் 3-ந்தேதி வரை திரு அருட்பா முற்றோதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 7-ந்தேதி திருஅறை தரிசனம் நடைபெற உள்ளது.

    வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. சபையின் தெற்கு வாசல் வழியாக உள்ளே சென்றால் வலது புறம் பொற்சபையும், இடது புறம் சிற்சபையும் உள்ளன. இவைகளுக்கு மத்தியில் பஞ்சபூத தத்துவங்களை குறிக்கும் 5 படிகளை கடந்து உள்ளே சென்றால் சதுரபீடத்தில் வள்ளலார் ஏற்றி வைத்த தீபம் காணப்படும்.

    அதன் முன் 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக்கண்ணாடி உள்ளது. கண்ணாடிக்கு முன்னால் கருப்பு, நீலம், சிவப்பு என 7 வண்ணங்களிலான திரைகள் காணப்படும். இந்த திரைகளை நீக்கி நிலைக்கண்ணாடிக்கு பின் உள்ள தீபத்தை தரிசிப்பதே ஜோதி தரிசனம்.

    சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தை மாசம் பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் நடக்கும். அதன்படி இந்த ஆண்டு 152-ம் ஆண்டுக்கான தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதலுடன் தொடங்கியது. விழாவில் வருகிற இன்று முதல் 3-ந்தேதி வரை ஞானசபையில் திரு அருட்பா முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் வருகிற 4-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு அகவல் பாராயணம், 7.30 மணி அளவில் வடலூர் தருமச்சாலை, வள்ளலார் பிறந்த மருதூர் இல்லம், தண்ணீரால் விளக்கு எரிவித்த கருங்குழி ஆகிய இடங்களில் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது.

    தொடர்ந்து 10 மணி அளவில் சத்திய ஞானசபையில் பார்வதிபுரம் கிராமவாசிகள் சார்பில் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. பின்னர் மதியம் 1 மணியளவில் தருமச்சாலை மேடையில் திருஅருட்பாஇசை நிகழ்ச்சியும், தொடர்ந்து சன்மார்க்க கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் 5-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள்(திங்கட்கிழமை) காலை 5 மணி ஆகிய 6 காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. பின்னர் 7-ந்தேதி மதியம் 12 மணிக்கு திருஅறை தரிசனம் நடைபெற உள்ளது.

    தரிசன விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை முதன்மை செயலாளர், இந்து சமய ஆணையர், கூடுதல் ஆணையர், மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவையொட்டி சத்திய ஞான சபை திடலை சுத்தம் செய்யும் பணிகள் உள்ளிட்டவைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×