search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் 3-ந்தேதி தேரோட்டம்
    X

    திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதை படத்தில் காணலாம்.

    சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் 3-ந்தேதி தேரோட்டம்

    • 29-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 30-ந்தேதி கழுவன் திருவிழா நடக்கிறது.

    சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சேவுகப்பெருமாள் அய்யனார் பூரண புஷ்கலா தேவியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் வரும் விசாக திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1-ந்தேதி நடைபெற்றதால் இந்தாண்டு நாளை ஆனி மாதத்தில் காப்பு கட்டப்பட்டு திருவிழா தொடங்குகிறது. முன்னதாக கடந்த 15-ந்தேதி இரவு சுவாமி சந்திவீரன் கூடத்திற்கு செல்லுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று காலை முதல் நிகழ்ச்சியாக கடந்த 15-ந் தேதி இரவு சந்திவீரன் கூடத்திற்கு வைகாசி திருவிழா காணிக்கை வாங்க சென்றதாக கூறப்படும் நிகழ்ச்சிக்காக சென்ற வெண்கல விநாயகர் வெள்ளி சப்பரத்தில் திருவிழாவிற்கான வசூல் முடிவுற்று கோவிலுக்கு திரும்பும் நிகழ்வு நடைபெற்றது. வெண்கல விநாயகர் சேவுகப் பெருமாள் அய்யனார் கோவிலுக்கு எழுந்தருள் நிகழ்ச்சியை தொடர்ந்து கோவில் கண்காணிப்பாளர் தண்ணாயிரம் முன்னிலையில் வெண்கல விநாயகர், அம்பாள், சேவுகப் பெருமாள் அய்யனார் உற்சவமூர்த்திகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவில் முன்பு உள்ள பிரமாண்டமான கொடிமரத்தின் முன்பு சிவாச்சாரியாருக்கான காப்பு செல்வமணி சிவாச்சாரியாருக்கும், பூஜகருக்கான காப்பு சேவுகமூர்த்தி பூஜகர்க்கும் கட்டப்பட்டது. இதையடுத்து பிடாரியம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள் சின்னையா, கதிரேசன், அருணகிரி, சேதுராமலிங்கம், செந்தில் கணேசன், சேவற்கொடியோன், கணேசன் உள்ளிட்ட வேளார் வம்சாவளி சிவாச்சாரியார்களுடன் கோவில் பரம்பரை பூஜகர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் 29-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 30-ந்தேதி கழுவன் திருவிழாவும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 3-ந்தேதி தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும், தேர் நிலையை வந்தடைந்ததும் லட்சக்கணக்கான பக்தர்கள் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    4-ந் தேதி 10-ம் நாள் திருவிழா அன்று நள்ளிரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகிநாச்சியார் உத்தரவுக்கிணங்க தேவஸ்தான அதிகாரி தன்னாயிரம், சிங்கம்புணரி கிராமத்தார்கள், அடைக்கலம் காத்த நாட்டார்கள், கோவில் பரம்பரை ஸ்தானிகம் சிவாச்சாரியார்கள், பூஜகர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×