search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரனை வதம் செய்த முருகப்பெருமான்
    X

    சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரனை வதம் செய்த முருகப்பெருமான்

    • சிறப்புகளை கொண்டது சிக்கல் சிங்காரவேலவர் கோவில்.
    • சிக்கல் நவனீதேஸ்வரர் கோவில் என்பது இதன் மூலப்பெயர்.

    திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய 6 தலங்கள் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளாக கருதப்படுகின்றன. இந்த தலங்கள் ஒவ்வொன்றிலும் முருகப்பெருமான் திருவிளையாடல்கள் புரிந்துள்ளார். முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு நிகரான சிறப்புகளை கொண்டது சிக்கல் சிங்காரவேலவர் கோவில்.

    சிக்கல் சிங்காரவேலவரை தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. இந்த கோவில் நாகப்பட்டினம் அருகே சிக்கல் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது. சிக்கல் நவனீதேஸ்வரர் கோவில் என்பது இதன் மூலப்பெயர். சிக்கல் சிங்கார வேலவர் ஆலயம் முருகப்பெருமான் திருக்கோவில்களில் மிக முக்கியமானது. இந்த கோவில் ஆச்சர்யமான அமைப்பாக முருக பெருமான் ஆலயத்தில் சிவன் மற்றும் விஷ்ணு பெருமான் இருவரும் இங்கே அமைந்து அருள் பாலிக்கின்றனர்.

    இந்த கோவிலின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. விண்ணுலகத்தில் இருக்க கூடிய காமதேனு பசு ஒருமுறை பஞ்சம் காரணமாக மாமிசம் உண்டுவிட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சிவபெருமான் அந்த பசுவிற்கு சாபம் வழங்கினார். சாபத்தினால் மிகவும் கவலையுற்ற காமதேனு, இறைவனிடம் இறைஞ்சி சாப விமோசனம் கோரினார். மனம் இறங்கிய சிவபெருமான் பூலோகத்தில் மல்லிகை வனம் உண்டு அங்குள்ள தலத்தில் நீராடி அங்குள்ள இறைவனை வணங்கினால் சாபம் நீங்கும் என அருளினார். அதன்படியே இன்றைய சிங்காரவேலவர் கோவில் அமையப்பெற்றுள்ள இடத்தில் உள்ள குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றார் காமதேனு.

    அதன் பொருட்டு காமதேனு பசுவின் மடியில் பெருகிய பால் பாற்குளத்தை உருவாக்கியது. அதுவே இன்றும் புனிதகுளமாக கருதப்படுகிறது. வசிஸ்ட மாமுனி, அந்த பாலில் இருந்து கிடைத்த வெண்ணையை கொண்டு அங்கேயே சிவலிங்கம் வடித்து வழிபட்டார். தன்னுடைய பூஜை முடிந்த பின்பாக அந்த சிவலிங்கத்தை அவர் எடுக்க முற்பட்ட போது அது சிக்கி கொண்டு வர மறுத்தது அதன் பொருட்டே இந்த ஊருக்கு சிக்கல் என பெயர் வந்தது என்ற நம்பிக்கையும் உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் கந்தசஷ்டி சூர சம்ஹார விழாவின்போது அன்னையிடமிருந்து வேல்வாங்கும் வைபவம் நடைபெறுவது சிறப்பம்சமாகும். இங்கிருந்து வாங்கிய வேலை கொண்டு திருச்செந்தூரில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார்.

    Next Story
    ×