என் மலர்
வழிபாடு

சிவபெருமானின் அருளால் விஷ்ணுவுக்கு கிடைத்த சங்கு - சக்கரம்
- அமிர்தம் கிடைப்பதற்காக அசுரர்களும், தேவர்களும் இணைந்து, திருப்பாற்கடலைக் கடைந்தனர்.
- கயிலாயம் சென்ற சலந்தரன், சிவபெருமானை யுத்தத்திற்கு அழைத்தான்.
மகாவிஷ்ணுவின் கையில் பல ஆயுதங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவை, சங்கு- சக்கரம். இவை இரண்டும் கொண்டிருப்பதால் விஷ்ணுவை, 'சங்கு சக்கரதாரி' என்றும் அழைப்பார்கள். காக்கும் கடவுளான விஷ்ணு, சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்ததன் பலனாக, இந்த சங்கு - சக்கரத்தைப் பெற்றார். அது பற்றி இங்கே பார்க்கலாம்.
சங்கு பெற்ற கதை
அமிர்தம் கிடைப்பதற்காக அசுரர்களும், தேவர்களும் இணைந்து, திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலுக்குள் இருந்து முதலில் ஆலகால விஷமும், அதன் பின்னர் பல்வேறு தெய்வீக பொருட்களும், தெய்வ கன்னிகளும், தேவதைகளும், சில உப தெய்வங்களும் கூட வெளிவந்தனர். அப்படி கடலில் இருந்து தோன்றிய அற்புதப் பொருட்களில் ஒன்றுதான், சங்கு. பாற்கடலில் தோன்றிய இந்தச் சங்கு 'நமசிவாய' என்ற பஞ்சவனான (ஐந்தெழுத்தன்) பரம்பொருளை அடைந்ததால், 'பாஞ்ச ஜன்யம்' எனப்பெயர் பெற்றது.
ஈசனின் திருக்கரத்தில் இருந்த அந்த சங்கினைப் பெற, விஷ்ணு விருப்பம் கொண்டார். அதற்காக சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, காலம் தவறாமல் சிவ பூஜை செய்தார். பல காலம் செய்த பூஜையின் பலனாக, விஷ்ணுவுக்கு ஈசனால் சங்கு வழங்கப்பட்டது. இப்படி ஈசனிடம் இருந்து விஷ்ணு சங்கை பெற்ற தலம், 'திருசங்கை மங்கை' என்று வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஈசனுக்கு சங்கநாதர், சங்கேசுவரர் ஆகிய பெயர்கள் உள்ளன.
சக்கரம் பெற்ற கதை
சமுத்திர ராஜனுக்கும், கங்காதேவிக்கும் பிறந்தவன், சலந்தரன். இவன் தன் செய்கையின் காரணமாக அசுரனாக வளர்ந்தான். தன் தவ வலிமையால் தேவர்களை துன்புறுத்தி வந்தான். இந்திரனை ஓடஓட விரட்டிய சலந்தரன், படைப்புக் கடவுளான பிரம்மனையும் தாக்க முற்பட்டான். அவனிடம் இருந்து தப்பிய பிரம்மன், விஷ்ணுவிடம் சரணடைந்தார். இதையடுத்து சலந்தரனுடன் விஷ்ணு போரிட்டார். இருவராலும் ஒருவரை ஒருவர் வெல்லவும் முடியவில்லை, கொல்லவும் முடியவில்லை. இருவரும் களைப்படைந்தனர்.
பின்னொரு நாளில் கயிலாயம் சென்ற சலந்தரன், சிவபெருமானையும் யுத்தத்திற்கு அழைத்தான். அப்போது ஈசன், "உனக்கு ஒரு சோதனை வைக்கிறேன். அதில் வென்றால் உன்னுடைய போரிடுகிறேன்" என்றார். சலந்தரனும் ஒப்புக்கொண்டான். உடனே சிவபெருமான், தரையில் தன் கால் கட்டை விரலால் ஒரு வட்டம் வரைந்தார். பின்னர் "இந்த வட்டத்தை தூக்கு பார்க்கலாம்" என்றார். சலந்தரனும் அந்த வட்டத்தை பெயர்த்து எடுத்து, தன் தலை மீது வைத்தான். அப்போது அந்த வட்டம், சக்கரமாக மாறி சுழலத் தொடங்கியது. அது சலந்தரனின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியது.
சிவபெருமானால் உருவான அந்த சக்கரம் எதிர்காலத்தில் பயன்படும் என்று கருதிய விஷ்ணு, அதனைப் பெறுவதற்காக பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் இருந்த சிவபெருமானை பூஜித்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜை செய்தார். ஒரு நாள், ஆயிரம் பூவில் ஒரு பூ குறைந்தது. உடனே விஷ்ணு சற்றும் யோசிக்காமல் தன்னுடைய கண்களில் ஒன்றை தோண்டி எடுத்து, அதனை மலராக கருதி, சிவனுக்கு பூஜை செய்தார். அந்த பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான், உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த சக்கரத்தை, விஷ்ணுவுக்கு வழங்கினார்.






