search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    2 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம்: பிள்ளையார்பட்டி கோவில் தேருக்கு வர்ணம் பூசும் பணி தீவிரம்
    X

    2 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம்: பிள்ளையார்பட்டி கோவில் தேருக்கு வர்ணம் பூசும் பணி தீவிரம்

    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 30-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • விழாவையொட்டி பல கட்ட முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

    திருப்பத்தூர் அருகே பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த விழா அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. 2 ஆண்டுகளாக மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் தேரோட்டம் மட்டும் நடைபெறவில்லை.

    இந்தாண்டு இந்த விழா நேற்று முன்தினம் முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தினந்தோறும் இரவு பல்வேறு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 30-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தாண்டு தேரோட்டம் நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தேர் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட கண்ணாடி கூண்டை அகற்றி தற்போது தேர் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தேரை சுற்றி பெயிண்ட் மூலம் வர்ணம் பூசி அழகுபடுத்தும் பணி நடக்கிறது.

    இதுகுறித்து கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் நா.கருப்பஞ்செட்டியார், ஆத்தங்குடி சி.சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் கூறியதாவது:- மிகவும் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி தினந்தோறும் இரவு சொற்பொழிவு நிகழ்ச்சி, பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் தேரோட்டம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேரோட்டத்திற்கு தேர் தயார் நிலையில் உள்ளது. தற்போது அவற்றை வர்ணம் பூசி அழகுபடுத்தும் பணி நடக்கிறது.

    விழாவையொட்டி பல கட்ட முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. மேலும், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×