search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி முருகன் கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
    X

    வெளிப்பிரகாரத்தில் வரிசையில் காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    பழனி முருகன் கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

    • ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், முடிக்காணிக்கை செலுத்தியும் வழிபட்டனர்.
    • முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பழனி 3-ம் படைவீடாகும்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி கோவிலுக்கு திருவிழாக்கள் மட்டுமின்றி வாரவிடுமுறை, கிருத்திகை, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும்.

    அதன்படி ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் அங்குள்ள மக்கள் பண்டிகை முடிந்தவுடன் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய படையெடுத்து வருகின்றனர்.

    இதேபோல் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் குவிந்தனர். இதனால் அதிகாலை முதலே அடிவாரம், பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில் என அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது.

    சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், முடிக்காணிக்கை செலுத்தியும் வழிபட்டனர்.

    இதற்கிடையே பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல பக்தர்கள் பயன்படுத்தி வரும் ரோப்கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நேற்று நிறுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின்இழுவை ரெயிலை பயன்படுத்தி செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியது.

    ஆனால் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல முதியோர்கள், மாற்றுத்திறனாளி பக்தர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    பழனி மின்இழுவை ரெயில்நிலையத்தில் இருந்து 3 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 3-வது மின்இழுவை ரெயில் கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி பழுதடைந்தது. அதையடுத்து அதை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. எனவே தற்போது 2 ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மின்இழுவை ரெயில்நிலையத்தில் பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சென்றனர். எனவே 3-வது மின்இழுவை ரெயிலில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இதேபோல் வார விடுமுறை நாட்களில் ரோப்காரில் பராமரிப்பு பணி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்துக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×