search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
    X

    தெப்பத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகர் வலம் வந்த போது எடுத்த படம். (உள்படம்:- சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகர்).

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    • சிவகர தீர்த்த குளத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகர் எழுந்தருளினர்.
    • இன்று ஞானப்பால் பஞ்சமூர்த்திகள் வீதி உலா காட்சி நடக்கிறது.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்கார, தீபாராதனை நடந்தது. அதன்பிறகு சூரிய பிரபை, சிம்ம வாகனம், பல்லக்கு, பூத, காமதேனு, நாக வாகனங்களில் சாமி வீதி உலா வந்தது. தொடர்ந்து அதிகாரநந்தி கோபுர தரிசனமும், தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.

    அதையடுத்து வெள்ளி ரதத்தில் சாமி வீதி உலா, திருக்கல்யாணம் பரிவேட்டை, குதிரை வாகனம், பிச்சாண்டவர் புறப்பாடு, தங்க கைலாய வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா கடந்த 2-ந் தேதி நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன் எழுந்தருளினர். அதையடுத்து அங்கு திரண்டு நின்ற பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேரில் சாமிகள் அசைந்தாடி வந்த கண் கொள்ளாக்காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

    நேற்று முன்தினம் நடராஜர் தரிசனம், தீர்த்தவாரி, முத்துப்பல்லக்கு, அவரோகணமும், நேற்று இரவு தெப்ப உற்சவமும் நடந்தது. இதில் சிவகர தீர்த்த குளத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகர் எழுந்தருளினர். தொடர்ந்து தெப்பத்தில் 7 முறை வலம் வந்தது. அதன்பிறகு சாமி மாட வீதிகளில் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) ஞானப்பால் உண்ட ஐதீகம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா காட்சி நடக்கிறது.

    Next Story
    ×