என் மலர்
வழிபாடு

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 5-ம்தேதி நடக்கிறது
- காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 2 நாட்கள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் மலை மேல் செல்ல அனுமதி இல்லை.
பங்குனி மாதம் வரும் பவுர்ணமியில் அனைத்து முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டா டப்படும். கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.
இங்கு பங்குனி உத்திர திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை 2 நாட்கள் நடக்கிறது.
நாளை மறுநாள் அதிகாலை 6 மணிக்கு கோபூஜை நடக்கிறது. அதை தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வரும் பால்குடம், பால் காவடிகள் மூலம் முருகப்பெருமானுக்கு மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள், காலை 8 மணிக்கு பால், பன்னீர், ஜவ்வாது போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் ராஜ அலங்காரத்தில் சுப்பிரமணிய சாமி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்கிறார். 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, பாலாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெறுகிறது. இதையடுத்து சுப்பிரமணியசாமி - வள்ளி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் அர்த்தமண்டபத்தில் எழுந்தருள்கிறார். மாலை 6 மணிக்கு சாயரட்ச பூஜை, தங்க ரதத்தில் சுப்பிரமணிய சாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார்.
நாளை மற்றும் நாளைமறுநாள் ஆகிய 2 நாட்களும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் மலை மேல் செல்ல அனுமதி இல்லை.
அதற்கு பதிலாக மலைக்கோவில் செல்வதற்கு கோவில் சார்பில் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது.
அதன் மூலம் பக்தர்கள் மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
விழா ஏற்பாடுகளை மருதமலை கோவில் துணை ஆணையர் ஹர்சினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






