search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    • இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.
    • சூரசம்ஹாரம் அக்டோபர் 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது.
    • 7-ந்தேதி சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    முதலாம் திருநாளான 26-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா, காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் கொடிமர பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும்.

    தொடர்ந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் கைகளில் திருக்காப்பு அணிவிக்கப்படுகிறது. காப்பு அணியும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துகின்றனர்.

    விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம், இன்னிசை நிகழ்ச்சி போன்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது.

    11-ம் திருநாளான 6-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்த பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.

    12-ம் திருநாளான 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×