search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தேரோட்டதை வடம் பிடித்து தொடங்கி வைத்த பிரெஞ்சு கவர்னர்கள்
    X

    தேரோட்டதை வடம் பிடித்து தொடங்கி வைத்த பிரெஞ்சு கவர்னர்கள்

    • கடல் வழியாகத்தான் காரைக்காலுக்குப் போவார்கள்.
    • வீராம்பட்டினம் வீரராகவ செட்டியார் கோவில் தலைவராக இருக்கிறார்.

    இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 1948-க்கு முன் இந்தியாவை ஆங்கி லேயர்கள் ஆட்சி செய்தார்கள். தமிழ்நாடும் அதில் அடங்கும். ஆனால் புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்தார்கள்.

    ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஏனாம், கேரளாவில் உள்ள மாகி, காரைக்கால், புதுச்சேரி இவை 4 பிராந்தியங்களும் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியாக நடந்து கொண்டு இருந்தது. அப்போது சாலை, போக்குவரத்து, மின்சாரம் இல்லாத காலங்கள். கடல் வழியாகத்தான் காரைக்காலுக்குப் போவார்கள்.

    புதுச்சேரியைப் புதுவை என்றும் வேதபுரி என்றும் அழைத்தார்கள். புதுவை சுவர்னர் பாய்மரக் கப்பலில் கடல் வழியாகக் காரைக்காலுக்குச் செல்வது வழக்கம், ஒருமுறை கடலூர் ரெட்டி சாவடிக்குக் கிழக்கே கடலில் ஆங்கிலேயர் பாய் மரக்கப்பல் ஆங்கர் போட்டு இருந்தது. அந்தக் கப்பலைக் கடந்து போனால் சண்டை ஏற்படும். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார் கவர்னர்.

    கவர்னர் மாளிகையில் வேலை செய்யும் ஒருவர். 'என்ன அய்யா சோகமா இருக்கீங்க' என்று கேட்க, நாளைக்குக் காரைக்கால் செல்ல வேண்டும். வழியில் ஆங்கிலேயரின் கப்பல் ஆங்கரில் இருக்கிறது. அதான் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று

    கவர்னர் கூறினார். ஒரு நாள் இரவு கவர்னர் கடற்கரைக்கு வந்து இருக்கிறார். என்ன தெற்கே ஊரில் தீப்பந்தம் தெரியது. வெடி சத்தம் கேட்குது என்ன என்று கவர்னர் கேட்டாராம்.

    வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் திருவிழா நடக்குது என்றும் அம்மன் சக்தியைப் பற்றியும் அவரிடம் கூறி இருக்கிறார்கள். அப்போது கவர்னர் திருவிழாவை பார்க்கப் போக வேண்டும் என்று கூறியுள்ளார்.

    அப்போது வீராம்பட்டினம் வீரராகவ செட்டியார் கோவில் தலைவராக இருக்கிறார். அவரை அழைத்து வந்து ஆலோசனை கேட்டால் வழி கிடைக்கும் என்று கவர்னரின் பணியாள் கூறினார்.

    அன்று மாலையில் வீரராகவ செட்டியாரை அழைத்து கவர்னர் ஆலோசனை கேட்டார். அப்போது நாளைக்கு காலையில் நீங்கள் காரைக்காலுக்குப் போகும் போது அந்த கப்பல் அங்கு இருக்காது. நீங்கள் தங்கு தடை இல்லாமல் போய் வரலாம் என்று

    வீரராகவ செட்டியார் கூறினார்.

    கவர்னருக்கு ஒன்றும் புரியவில்லை. வேடிக்கையாக இருக்கிறது. அவர் எப்படிச் சொல்லுகிறார், காரைக்காலுக்குப் போக முடியுமா? என்று கவர்னருக்குப் பல கேள்விகள் எழுந்தது. அடுத்த நாள் காலையில் கடற்கரையில் வந்து பார்த்தார்.

    ஆங்கிலேயர் கப்பல் கடலில் நங்கூரம் போட்டு இல்லை. உடனே தன் பாய்மரக்கப்பலில் கிளம்பிக் காரைக்காலுக்குப் போனார். அங்கு வேலைகளை முடித்துக் கொண்டு புதுவைக்கு வந்தார். வீரராகவ செட்டியாரைப் பார்க்க வீராம்பட்டினம் கவர்னர் வந்தார். கவர்னரைத் கோவிலில் வரவேற்பு கொடுத்து மரியாதை செய்தார் வீரராகவர் செட்டியார்.

    அப்போது எப்படி ஒரே இரவில் ஆங்கிலேயர் கப்பல் காணாமல் போனது என்று கவர்னர் கேட்டார். நடு இரவில் கட்டு மரத்தில் 4 ஆட்கள் போய் (அலவாங்கு) கடப்பாறையால் குத்தி கப்பலைக் கடல் அடியில் அழுத்தி விட்டோம் என்று வீரராகவச் செட்டியார் கூறினார்.

    வீரராகவ செட்டியாரின் வீரத்தையும், துணிச்சலையும் பாராட்டினார். செங்கழுநீர் அம்மனின் வரலாற்றையும் அதன் அருமை பெருமைகளையும் அதன் சக்தியையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். 10 நாள் அம்மனுக்குத் திருவிழா நடக்கும். மேலும் தேர்த் திருவிழாவும் நடைபெறும் என்று வீரராகவ செட்டியார் தெரிவித்தார்.

    இப்படி சக்தி உள்ள அம்மனின் தேரோட்டத்தை இனி மேல் ஆண்டு தோறும் நான் தொடங்கி வைக்கிறேன்; நான் வடம் பிடித்து தேரை இழுத்து ஆரம்பிக்கிறேன் என்று கவர்னர் கூறினார். அவர் கூறியது போல் ஆண்டுதோறும் கவர்னர் வடம் பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

    புதுவைப் பகுதியில் வேறு எந்தத் கோவிலுக்கும் இந்த மாதிரி கவர்னர் வடம் பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கியது கிடையாது. வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலுக்கு மட்டும் இந்தப் பெருமை உண்டு.

    Next Story
    ×