search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பண்ணாரி மாரியம்மன் கோவிலில் கம்பம் சாட்டும் விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
    X

    கம்பம் சாட்டப்பட்டபோது எடுத்த படம்.

    பண்ணாரி மாரியம்மன் கோவிலில் கம்பம் சாட்டும் விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

    • 4-ந்தேதி குண்டம் விழா நடக்கிறது.
    • 6-ந்தேதி தங்க ரதம் புறப்பாடு நடக்கிறது.

    சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா ஆண்டுதோறும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 20-ந் ேததி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மறுநாளான 21-ந் தேதி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மன் வீதி உலா தொடங்கியது. அம்மனின் வீதி உலாவானது பண்ணாரியை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து அம்மனின் சப்பரம் வீதி உலா நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவிலை சென்றடைந்தது. சப்பரம் கோவிலை சென்றடைந்ததும், அங்கு கூடியிருந்த பக்தர்கள் அம்மனை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் அம்மனுக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    இதையடுத்து அம்மன் கோவிலை சுற்றியுள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் ஏராளமான பக்தர்கள் தங்களுடைய கைகளில் காப்பு கட்டிக்கொண்டு வந்து அம்மனை தரிசித்தனர்.

    இதைத்தொடர்ந்து கோவிலின் ஒரு பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த வேம்பு மற்றும் ஊஞ்சல் மரக்குச்சிகளை கோவில் பூசாரி மற்றும் பக்தர்கள் ஆளுக்கு கொஞ்சமாக தங்களுடைய கையில் எடுத்துக்கொண்டு பண்ணாரி அம்மன் கோவிலை சுற்றி வலமாக வந்தனர்.

    அப்போது கோவிலின் முன்பாக குண்டத்தின் அருகே 5 அடி ஆழத்துக்கு 15 அடி விட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள குழியில் தங்களுடைய கைகளில் கொண்டு வந்த வேம்பு மற்றும் ஊஞ்சல் மரக்குச்சிகளை போட்டனர். இதையடுத்து நேற்று அதிகாலை 4 மணி அளவில் கம்பம் சாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது குழியில் போடப்பட்ட வேம்பு மற்றும் ஊஞ்சல் மரக்குச்சிகள் மீது கற்பூரம் ஏற்றி நெருப்பு பற்றவைக்கப்பட்டது. இதனால் குழிக்குள் போடப்பட்ட மரக்குச்சிகள் தீப்பற்றி ஆள் உயரத்திற்கு ஜூவாலையுடன் எரிந்தது. இதைக் கண்டதும் அங்கு கூடியிருந்த பக்தர்கள், 'அம்மா தாயே, பண்ணாரி தாயே, சக்தி தாயே, பண்ணாரி சக்தியே,' என பக்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் அங்கிருந்த மலைவாழ் மக்கள் பீனாச்சி வாத்தியம் இசைத்தனர்.

    அந்த இசைக்கு ஏற்ப பக்தர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் நடனமாடி குழி கம்பத்தை சுற்றி வந்தனர். குழி கம்பத்தை சுற்றிலும் வருகிற 3-ந் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆண், பெண் பக்தர்கள் நடனமாடும் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 4-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவர். இதைத்தொடர்ந்து 5-ந் தேதி காலையில் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், மாலையில் திருவிளக்கு பூஜையும், இரவு 10 மணிக்கு புஷ்ப ரதத்தில் சிம்ம வாகனத்தில் பண்ணாரி அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும், 6-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 7-ந் தேதி மாலை 6 மணிக்கு தங்க ரதம் புறப்பாடும் நிகழ்ச்சியும், 10-ந் தேதி மறுபூஜையும் நடைபெறுகிறது.

    Next Story
    ×