search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
    X

    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

    • இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்றுமண்ணால் உருவானது.
    • மூலவர் புற்று மண்ணால் உருவானதால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

    தஞ்சையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்றுமண்ணால் உருவானது. மூலவர் புற்று மண்ணால் உருவானதால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

    இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மற்ற அம்மன் கோவில்களை விட புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆவணி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த நாட்களில் தேரோட்டம், தெப்ப உற்சவம் போன்றவை நடைபெறும்.

    18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குடமுழுக்கு நடத்துவதற்கான திருப்பணிக்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் திருவிழாக்கள் நடைபெறாது. ஆனால் வழக்கம்போல் அம்மனை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு வந்தனர். கிராமப்புறங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முதல்நாள் இரவு வந்து கோவிலில் தங்கியிருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    அம்மன் சன்னதியில் பூக்களால் தோரண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மூலவர் அம்மனுக்கு சம்மங்கி பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்து.

    பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக பொதுவழி, சிறப்புவழி என 2 வழிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. பக்தர்கள் இந்த 2 வழிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    மேலும் நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக்கொண்ட பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×