search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது
    X

    அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது

    • பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது.
    • 9 நாட்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    திருப்பதியை அடுத்த அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (புதன்கிழமை) தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி நேற்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை சாஸ்திர பூர்வமாக மேதினி பூஜை, சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் நடந்தது.

    பிரம்மோற்சவ விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சாளுவப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரங்கோலி கோலம் வரையப்பட்டுள்ளது. பக்தர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இன்று (புதன்கிழமை) காலை கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, நாளை (வியாழக்கிழமை) காலை சின்ன சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 2-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 3-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, மாலை கல்யாணோற்சவம், இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா.

    4-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதிஉலா, இரவு கருட வாகன வீதிஉலா, 5-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா, 6-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 7-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 8-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது.

    மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி தனித்தும், உபயநாச்சியார்களுடன் இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 9 நாட்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    Next Story
    ×