search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அத்தனூர் அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது
    X

    அம்மனுக்கு சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட போது எடுத்த படம்.

    அத்தனூர் அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது

    • அத்தனூர் அம்மன் கோவில் புராண கால சிறப்பு கொண்டதாகும்.
    • செவ்வாய்க்கிழமை 48 நாட்களுக்கான முழு மண்டலாபிஷேகம் நடக்கிறது.

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே பிரசித்தி பெற்ற அத்தனூர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் புராண கால சிறப்பு கொண்டதாகும். கொங்கண சித்தர் மலை சாரலில் அமைந்துள்ள அத்தனூர் அம்மன் கோவில் மன்னர்கள் வழிபட்டதாகவும், இதனால் கோவிலுக்கு சுகவனம் என்ற பெயர் பெற்றதாக நம்பப்படுகிறது. இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவுபெற்று நாளை (திங்கட்கிழமை) மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி கடந்த 7-ந் தேதி விக்னேஸ்வரா பூஜை, மகா கணபதி ஹோமம், கோ பூஜை நடந்தது. 8-ந் தேதி மங்கள இசையுடன் தீர்த்தக்குடங்கள், முளைபாலிகைகள் எடுத்து வருதல், புண்யாகம், பஞ்சகவ்யம், தீபாராதனை நடைபெற்றது. 9-ந் தேதி மகாலட்சுமி, சரஸ்வதி ஹோமம், கலசாபிஷேகம், விநாயகர் பூஜை மற்றும் நேற்று திருமுறை பாராயணம், பூதசுத்தி புண்யாகம், யாகபூஜை, தீபாராதனை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) மங்கள இசை, திருமுறை பாராயணமும், விமானம் கண் திறப்பு, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அத்தனூர் அம்மன், ஸ்ரீ அத்தாயி அம்மன், மூலவர் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம், மருந்து சாத்துதல், பரிவார தெய்வங்கள் அஷ்ட மருந்து சாத்துதல் நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு லமல் புண்யாகம், மண்டபார்ச்சனை, யாகபூஜை, தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.

    இதனை தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, புண்யாகம், பிம்பசுத்தி, ரக்‌ஷாபந்தனம், நாடி சந்தானம், வஸ்திர சமர்பணம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இதையடுத்து காலை 6.30 மணிக்கு மேல் ராஜகோபுரம் மற்றும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அத்தாயி அம்மன், உறும்பிக்காரன், ஸ்ரீ முத்து முனியப்பன், ஸ்ரீ மகா முனியப்பன், ஸ்ரீ ராஜ முனியப்பன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ ஆதிமூலவர் மற்றும் பரிவார தெய்வகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    பின்னர் காலை 9 மணிக்கு மேல் மகா அபிஷேகம், தசதரிசனம், அலங்காரம், உச்சிகால பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) 48 நாட்களுக்கான முழு மண்டலாபிஷேகம் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர் முத்துசாமி, இணை ஆணையர் பரஞ்சோதி மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். கும்பாபிஷேக விழாவையொட்டி அம்மனுக்கு சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    Next Story
    ×