search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு இன்று சுவாமி காட்சி கொடுக்கிறார்
    X

    நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு இன்று சுவாமி காட்சி கொடுக்கிறார்

    • நாளை சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 26-ந்தேதி சுவாமி-அம்பாள் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடக்கிறது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், வீதி உலாவும் நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அம்பாள் சிவபூஜை செய்யும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு காசுமாலை, பவளமாலை, காலில் கொலுசு, தலையில் சடை என சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    தொடா்ந்து சிவபூஜைக்கு தேவையான தேங்காய், பழம், பூ, வஸ்திரம் உள்ளிட்ட 11 தாம்பூல தட்டுகளுடன் பஞ்ச வாத்தியங்கள் மற்றும் நாதஸ்வரம், மேளம் இசைக்க அம்பாள் சன்னதியில் இருந்து காந்திமதி அம்பாள் கையில் தாமரைப்பூவும், மலர் கூடையையும் ஏந்திய சிறப்பு அலங்காரத்தில் சுவாமி சன்னதி மகாமண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து அா்ச்சகா், அம்பாள்- சிவனை பூஜை செய்வது போன்ற பாணியில் தூபம் இடுதல், பூக்களால் அா்ச்சனை செய்தல் என காந்திமதி அம்பாள், சுவாமி நெல்லையப்பருக்கு சிவபூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் சுவாமிக்கும்- அம்பாளுக்கும் சோடஷ தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பஞ்ச புராணம் பாடப்பட்டது. நிறைவாக சுவாமிக்கு மூலஸ்தானத்தில் 5 பஞ்ச தட்டு கற்பூர ஆரத்தியும், அம்பாளுக்கு 1 பஞ்ச தட்டு ஆரத்தியும் காண்பிக்கப்பட்டது. பூஜைகள் முடிந்தபின் அம்பாள் ஊா்வலமாக அம்மன் சன்னதிக்கு எழுந்தருளினாா். இந்நிகழ்வு வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். நேற்று நள்ளிரவில் காந்திமதி அம்பாள் சப்பரத்தில் கீழரதவீதி வழியாக கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைந்தார்.

    இன்று (சனிக்கிழமை) பகல் 12 மணிக்கு கம்பாநதி அருகே உள்ள காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவமும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) நெல்லைப்பர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் வைத்து அதிகாலை 4 மணிக்கு சுவாமி-அம்பாள் திருக்கல்யாணமும், காலை 9-30 மணிக்கு சுவாமி-அம்பாள் பட்டினப்பிரவேச வீதிஉலாவும் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா நடக்கிறது. 26-ந் தேதி சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×