search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது: பக்தர்கள் குவிந்தனர்

    • முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்க கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது.
    • 23-ந்தேதி முதல் 25ந்தேதி வரை தினமும் மாலையில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று அஸ்வினியுடன் தொடங்கியது. விழா வருகிற 25-ந்தேதி வரை விமரிசையாக நடைபெற உள்ளது.

    ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி திருத்தணி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தமிழகம் மற்றும் பிற மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்பக் காவடி, மயில் காவடி எடுத்து வந்தனர். ஏராளமான பக்தர்கள் மொட்டை அடித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    இதனால் திருத்தணி நகரமே விழாக்கோலமாக காணப்பட்டது. கோவில் முழுவதும் பக்தர்களாக நிரம்பி இருந்தனர்.

    விழாவையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்க கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    பக்தர்கள் முருகபெருமானுக்கு தலைமுடி காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில் திருத்தணி நகரின் அமிர்தாபுரம் நல்லான்குளம் பகுதி, சரவணபொய்கை திருக்குளம் பகுதி, சன்னதி தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    குற்றசெயல்களை தடுக்க முக்கிய இடங்களில் குற்றவாளிகளை கண்டறிய அதி நவீன 30 சி.சி.டி.வி கேமராக்கள் உள்பட 127 கேமராக்களை பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் பொது சுகாதாரத்துறை சார்பாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் , 5 அவசரக் கால வாகனங்கள், 108 ஆம்புலன்சுகள் நிறுத்தப்பட்டு உள்ளது.

    மின்சார வாரியம் மூலம் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகராட்சி சார்பாக 400-க்கும் மேற்பட்டவர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபடுத்தபட்டு உள்ளனர். தடையில்லா குடிநீர் வழங்க குடிநீர் தொட்டிகளும், 60 தற்காலிக நவீன கழிவறைகளும், எல்.ஈ.டி விளக்குகளும் பொருத்தப்படும். தீயணைப்புதுறை சார்பாக தீயணைப்பு ஊர்த்திகள் மற்றும் பணியாளர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக, அரக்கோணத்தில் இருந்தும் திருத்தணிக்கு இன்று முதல் 25-ந் தேதி வரை 5 நாட்களுக்கு 3 சிறப்பு ரெயில்களும், தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் இருந்து திருத்தணிக்கு 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்கள் நாளை முதல் 25-ந் தேதி வரையில் 4 நாட்களிலும் இரவும், பகலும் இயக்கப்பட உள்ளது.

    பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருத்தணி நகர எல்லைகளில் உள்ள சென்னை- திருப்பதி சாலை, அரக்கோணம் - திருத்தணி சாலை, சித்தூர்- திருத்தணி சாலை போன்ற பகுதிகளில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    விழாவையொட்டி கோவிலில் ஆங்காங்கே குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. கோவிலில் 24 மணிநேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மேற்பார்வையில் திருத்தணி உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணித் தலைமையில் திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டத்தில் இருந்து 1300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்

    ஆடிக்கிருத்திகை திருவிழாவின் முக்கிய விழாவாக 23-ந்தேதி முதல் 25ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் தினமும் மாலையில் கோவிலுக்கு சொந்தமான சரவண பொய்கை திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் மேற்பார்வையில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, தக்கார் ஜெயப்பிரியா செய்து வருகின்றனர்.

    Next Story
    ×