search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிறப்பு அலங்காரத்தில் ராக்காயி அம்மன் மற்றும் முகூர்த்தக்கால் நடப்பட்ட போது எடுத்த படம்
    X
    சிறப்பு அலங்காரத்தில் ராக்காயி அம்மன் மற்றும் முகூர்த்தக்கால் நடப்பட்ட போது எடுத்த படம்

    அழகர்மலை ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு திருப்பணி தொடங்கியது

    மதுரையை அடுத்த அழகர்மலை நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்காக பாலாலய பூஜையுடன் திருப்பணி தொடங்கியது.
    மதுரையை அடுத்த அழகர்மலை உச்சியில் கள்ளழகர் கோவிலின் உபகோவிலான பிரசித்தி பெற்ற ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு வற்றாத நீரூற்றாக வழிந்து கொண்டிருப்பது நூபுர கங்கை எனும் புனித தீர்த்தமாகும். ராக்காயி அம்மன் திருப்பாதம் பகுதியில் மேற்கு திசைபார்த்து வழிந்து கொண்டிருக்கும் தீர்த்தம் அபூர்வமானது. இந்த திருத்தலத்தில் கும்பாபிஷேகம் நடத்த அரசும், அறநிலையத் துறையும் முடிவு செய்தது. அதன்படி பல ஆண்டு காலத்திற்கு பின்பு நேற்று முன்தினம் இந்த கோவிலில் பூர்வாங்க பூஜைகள் நடந்தன.

    இதை தொடர்ந்து நேற்று காலையில் புண்யாகவாசனம், மகாபூர்ணாகுதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், வேத மந்திரங்கள், மேள தாளம் முழங்க தொடங்கியது, மேலும் யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த நூபுர கங்கை புனித தீர்த்த குடங்களை கோவில் உள் பிரகாரத்திலே ஊர்வலமாக பட்டர்கள் எடுத்து சென்றனர். பின்னர் பாலாலய பூஜைகள், முகூர்த்தக்கால் நடும் பணியும் நடந்தது. இதை தொடர்ந்து திருப்பணி தொடங்கியது. இந்த பூஜைகள் நிகழ்வின்போது பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் காலை 11 மணிக்கு பிறகு காத்திருந்த ஏராளமான பக்தர்கள் நூபுர கங்கையில் நீராட ேகாவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    நீண்ட வரிசையில் சென்று நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராடி, பாலாலய பூஜைகள் நடைபெற்ற யாகசாலையையும் பார்த்து தரிசனம் செய்து சென்றனர். விழாவில் முன்னதாக துணை ஆணையர் ராமசாமி, நகை சரிபார்க்கும் அலுவலர் சுவாமிநாதன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதிபா, அருள்செல்வன், மற்றும் உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×