search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கண்ணுடைய நாயகி அம்மன்
    X
    கண்ணுடைய நாயகி அம்மன்

    கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் வைகாசி திருவிழா 4-ந்தேதி தொடங்குகிறது

    நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா 4-ந்தேதி தொடங்குகிறது. இதில் புகழ்பெற்ற வெள்ளி ரத விழா 11-ந் தேதி நடைபெறுகிறது.
    சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டையில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. உலக மாதாவான உமாதேவி தேவர்களின் வேண்டுகோளை ஏற்று பத்ரகாளி உருவம் கொண்டு கண்ணுடையாள் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார். கண்நோய் உள்ளவர்கள் இந்த அம்மனுக்கு வெள்ளி கண்மலர் வாங்கி காணிக்கையாக செலுத்தினால். கண்நோய் தீரும் என்று கூறுவார்கள்.

    புகழ் பெற்ற இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் வைகாசி மாத திருவிழாவில் நடைபெறும் வெள்ளி ரத விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா நாளை மறுதினம் 4-ந் தேதி காலையில் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதையொட்டி அம்மனுக்கு தினசரி அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். அத்துடன் தினசரி ஒரு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருவார். வருகிற 10-ந் தேதி வெள்ளிக்கிழமை தங்கரத புறப்பாடும், அன்று இரவு அன்ன வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.

    11-ந் தேதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் வெள்ளி ரத நிகழ்ச்சி நடைபெறும். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் கண்ணுடைய நாயகி அம்மன் திருவீதி உலா வருவார். 12-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம், 13-ந் தேதி திங்கட்கிழமை பால்குடம் எடுத்தல் நடைபெறுகிறது.

    14-ந் தேதி உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மதியம் அன்னதானமும் மாலையில் அம்மன் உள்வீதி பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிக்கு நாச்சியார் உத்தரவின்பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணன் கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் இளங்கோ செட்டியார் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் செய்து வருகின்றனர். வெள்ளி ரத நிகழ்ச்சியையொட்டி அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் மதுரை, காளையார்கோவில் மற்றும் சிவகங்கை ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    Next Story
    ×