
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பைகளை பக்தர்களிடம் இருந்து பறிமுதல் செய்த வனத்துறையினர் பக்தர்களுக்கு இனிப்புகள் கொடுத்து அனுப்பினர். பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரம் பகுதியிலிருந்து மலைப்பாதை வழியாக நடந்து சென்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு அமாவாசையை முன்னிட்டு மதியம் 12.30 மணியிலிருந்து 2 மணிவரை பால், பழம், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த அமாவாசை சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். தாணிப்பாறை அடிவார பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.