
பண்ணாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடப்பது வழக்கம். இதில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து குண்டம் இறங்குவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குண்டம் விழா ரத்து செய்யப்பட்டது. ஆனால் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கி வந்தனர்.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா வரும் மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி குண்டம் விழா நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) கோபி செட்டிபாளையம் ஆர்.டி.ஓ. பழனிதேவி தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையொட்டி 7-ந் தேதி இரவு வரம் கேட்டல் மற்றும் பூச்சாட்டுதலுடன் குண்டம் விழா தொடங்குகிறது.
அதனைத்தொடர்ந்து 15-ந் தேதி அம்மன் சப்பரம் திருவீதிஉலாவும், திருகம்பம் சாட்டுதல் நடக்கிறது. தொடர்ந்து 21-ந் தேதி இரவு தீக்குண்டம் வார்ப்பு விழாவும், 22-ந் தேதி அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான கர்நாடக, தமிழக பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு விழா நடப்பதால் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதையொட்டி அந்த பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.