
இந்த பூஜைகளை பாபா மகா மண்டல சுரேஷ்சந்திரா உபார்த்தயா, தமிழக விசுவ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் லீகல் ரைட்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா செயலாளர் சுரேஷ்குமார், டாக்டர் கிரிதரன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட நிர்வாகி ஆத்ம கார்த்திக், இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி, விசுவ இந்து பரிஷத் நிர்வாகி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த சிலையை காசிக்கு கொண்டும் செல்லும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
காசி வாரணாசியில், தமிழக கலாசாரத்தை மையமாக வைத்து புதிதாக கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த கோவிலில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்வதற்காக இ்ந்த பெரிய சிவலிங்கம் செய்யப்பட்டுள்ளது
இதுதவிர 4 அடிஉயரத்தில் நந்தி சிலை மற்றும் 4 அடி உயரத்தில் 12 சிறிய சிவலிங்க சிலைகளும் செய்யப்பட்டு லாரியில் ஏற்றி ராமேசுவரம் கொண்டு வந்தோம். சிவலிங்க சிலைகள் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க கோவில்களுக்கும் கொண்டு சென்று பூஜை செய்யப்படுகின்றது. அதன்பின்னர் வாரணாசியில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட உள்ளது. இதற்கான ஆன்மிக யாத்திரை 15-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் வழியாக செல்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ள லாரியை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராஜலட்சுமி மந்தா என்ற ஆசிரியை ஓட்டிச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.