search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கமலவல்லி நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.
    X
    கமலவல்லி நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்ததை படத்தில் காணலாம்.

    திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் இன்று தெப்ப உற்சவம்

    திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் இன்று (சனிக்கிழமை) மாலை தெப்ப உற்சவம் நடக்கிறது. இரவு 7 மணி முதல் 8 மணிவரை தெப்பம் உற்சவம் கண்டருளுகிறார்.
    108 வைணவ திருத்தலங்களில் 2-வது திவ்ய தேசமாக கருதப்படுவது திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலாகும். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலாக கமலவல்லி நாச்சியார் கோவில் விளங்குகிறது. இங்கு ஸ்ரீ கமலவல்லி நாச்சியார், ஸ்ரீ அழகியமணவாள பெருமாள் ஆகியோர் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றனர்.

    இக்கோவில் மங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசமாகும். மேலும் ஸ்ரீ திருப்பானாழ்வார் அவதரித்த திருத்தலமாகும். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் அனைத்து உற்சவங்களும் இக்கோவிலில் உள்ள தாயார் கமலவல்லி நாச்சியாருக்கும் நடைபெறுவது வழக்கம். அவற்றில் தெப்ப உற்சவமும் ஒன்றாகும்.

    கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவம் கடந்த 21-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் மாலை 6.15 மணிக்கு தாயார் கமலவல்லி நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வீதியுலா வந்து இரவு 8.45 மணிக்கு மீண்டும் மூலஸ்தானத்தை அடைந்து வருகிறார். அதன்படி, நேற்று மாலையும் பக்தர்களுக்கு தாயார் அருள் பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. முன்னதாக மாலை 5 மணிக்கு கமலவல்லி நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு ஆகிறார். இரவு 7 மணி முதல் 8 மணிவரை தெப்பம் உற்சவம் கண்டருளுகிறார். தொடர்ந்து பல்லக்கில் திருவீதி உலா வந்து இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் அடைகிறார்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6.30 மணிக்குள் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் திருமஞ்சனம் கண்டருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு பல்லக்கில் வீதியுலா வந்து மூலஸ்தானம் அடைகிறார்.
    Next Story
    ×