search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் சிறப்பு அலங்காரம்
    X
    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் சிறப்பு அலங்காரம்

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் சிறப்பு அலங்காரம்

    அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டும் நேற்று அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    கோவில் நடை திறக்கப்பட்டு நேற்று அதிகாலை 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகள் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் மதியம் 12 மணியளவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் தொடங்கியது. எண்ணெய், தயிர் மற்றும் சந்தனம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு பட்டாச்சாரியார்கள் அபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு குடம், குடமாக பால் ஊற்றியும் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதையொட்டி நாமக்கல் - கோட்டை சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதில் நாமக்கல் மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். அவர்கள் துளசி மாலை, வெற்றிலை மாலை கொண்டு வந்து சாமிக்கு சாற்றி வழிபட்டனர். இதையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
    Next Story
    ×