search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில்
    X
    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில்

    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 2-ந்தேதி நடக்கிறது

    கொரோனா ஊரடங்கு நடப்பில் உள்ளதால் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து வரவேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி சிலை உள்ளது. ஆஞ்சநேயருக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டிற்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    விழாவையொட்டி 1-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு தாணுமாலய சாமிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 6 மணிக்கு கால பைரவருக்கு தீபாராதனை போன்றவை நடக்கிறது.

    2-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு ராம பிரானுக்கு அபிஷேகம், காலை 8 மணிக்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமிக்கு நல்லெண்ணெய், ஆயிரக்கணக்கான லிட்டர் பால் மற்றும் தயிர், களபம், சந்தனம், குங்குமம், விபூதி, மஞ்சள், அரிசி மாவு, பன்னீர், எலுமிச்சை பழச்சாறு, கரும்புச் சாறு, பஞ்சாமிர்தம், மாதுளைச் சாறு, தேன் என 16 வகையான பொருட்கள் அடங்கிய சோடஷ அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகத்தை காண அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் கூடுவார்கள்.

    மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகம், இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயர் சாமிக்கு பல்வேறு பூக்களால் புஷ்பாபிஷேகம், இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது.

    கொரோனா ஊரடங்கு நடப்பில் உள்ளதால் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து வரவேண்டும், கைகளை சுத்தமாக கழுவிய பின்பே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் சமபந்தி விருந்து போல அளிக்காமல் பிரசாதமாக கொடுக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×