search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காரைக்கால் திருநள்ளாறு நளன் குளத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் புனித நீராடியதை படத்தில் காணலாம்.
    X
    காரைக்கால் திருநள்ளாறு நளன் குளத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் புனித நீராடியதை படத்தில் காணலாம்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு திருநள்ளாறு குளத்தில் நீராடிய பக்தர்கள்

    முறைப்படி அறிவித்து, புது தண்ணீரை திறந்துவிட கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    காரைக்கால் அருகே திருநள்ளாறில் சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா தொடர் ஊரடங்கு காரணமாக, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிப்பாட்டுத்தலங்களில் இயல்பாக சாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.

    இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால், கடந்த 3.6.2020 முதல், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பொதுவாக, திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் ஐதீகமுறைபடியும், கடந்த பல நூற்றாண்டுகளாகவும், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள், முதலில், நளன் குளத்தில் புனித நீராடி, தங்கள் ஆடைகளை, குளத்தில் வீசிவிட்டு செல்வதுதான் வழக்கம். பலர் ஆடைகளை கோவில் நிர்வாகம் அறிவுறுத்தல்படி, குளத்தின் கரையில் போட்டு வருகின்றனர்.

    ஆனால், கொரோனா தொற்று காரணமாக, மார்ச் 2020 முதல் நளன் குளத்தில் புனிதநீராட கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த தடை இதுவரை நடைமுறையில் உள்ளது. அதற்கு ஏற்றார் போல், நளன் குளத்தில் தண்ணீர் இரைக்கப்பட்டு, சீரமைப்பு பணி நடைபெற்று வந்தது. இதனால், பக்தர்கள் நளன் குளத்தில் புனிதநீராடாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் அருகில் உள்ள தனியார் விடுதிகளில் குளித்து விட்டு தங்களது ஆடைகளை, நளன் குளத்தின் கரைகளிலும், கோவிலை சுற்றியுள்ள பிரம்மதீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் உள்ளிட்ட புனித தீர்த்தங்களிலும் வீசிவிட்டு செல்வதால், மேற்கண்ட குளங்களில் குப்பைகள் அதிகரித்து வந்தது.

    எனவே, சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களின் நலன் கருதி, முன்னோர்கள் கூறிவந்த ஐதீகமுறைப்படி, நளன்குளத்தில் புனித நீராட, கோவில் நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். அல்லது, நளன் குளத்து புனித நீரை, பக்தர்கள் தலையில் தெளித்துகொள்ள நவீன கருவிகள் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். பக்தர்களின் ஆடைகளை போட, புனித தீர்த்தம் அருகில், தற்காலிக தொட்டிகளை அமைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், கோவில் நிர்வாகம் தடையை நீடித்து வந்தது.

    இந்தநிலையில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, நளன் குளத்தில் வெள்ளம் போல் தண்ணீர் நிரம்பியது. தற்போது ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் பலர் மாலை அணிந்திருப்பதால், சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வரும் போது, நளன் குளத்தில் நீராடி செல்கின்றனர்.

    நேற்று சனிக்கிழமை என்பதால், ஏராளமான பக்தர்கள் நளன் குளத்தில் புனித நீராடினர். இதனை கோவில் நிர்வாகம் தடுக்கவோ, ஆதரிக்கவோ இல்லை. இதனால், பக்தர்கள் 2 ஆண்டுகளுக்கு பிறகு மன நிம்மதியோடு புனித நீராடி சென்றனர். இதை முறைப்படி அறிவித்து, புது தண்ணீரை திறந்துவிட கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    Next Story
    ×