search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காட்சி.
    X
    உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காட்சி.

    கார்த்திகை தீபத்திருவிழா 7-ம் நாள்: ரதங்களில் பஞ்சமூர்த்திகள் பிரகார உலா

    ராஜகோபுரத்தின் முன்பு எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு ‘அரோகரா’ என்று பக்தி கோஷம் எழுப்பினர்.
    பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும்.

    இந்த ஆண்டிற்காக தீபத்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சாமி வீதி உலா ரத்து செய்யப்பட்டு உள்ளதால் விழா நாட்களில் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலையில் விநாயகர், சந்திரசேகரர், வள்ளி-தெய்வானையுடன் முருகன், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு 5-ம் பிரகாரத்தில் உற்சவ உலா நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் நேற்று தீபத்திருவிழாவின் 7-ம் நாள் விழாவாகும். வழக்கமாக 7-ம் நாள் விழாவின் போது பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறும். அதிகாலையில் தொடங்கி அன்று இரவு வரை தேரோட்டம் நடைபெறும். இதில், உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் கொரோனா காரணமாக கோவிலில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக கோவிலில் நிர்வாகம் சார்பில் ஆகம விதிகளின்படி கோவிலின் 5-ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகளின் ரதங்கள் பிரகார உலா வந்தது.

    முன்னதாக அதிகாலையில் கோவிலின் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருகல்யாண மண்டபத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க பஞ்சமூர்த்திகள் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து 5-ம் பிரகாரத்தில் ராஜகோபுரத்தின் முன்பு கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கு தேரோட்டம் நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக செய்யப்பட்டு இருந்த சிறப்பு ரதங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.

    முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் அனுமதி அளிக்கப்படவில்லை.

    பின்னர் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியை காண ராஜகோபுரத்தின் நுழைவு வாயில் அருகில் நின்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த குறைந்த அளவிலான பக்தர்களை கோவிலுக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். தொடர்ந்து ராஜகோபுரத்தின் முன்பு எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அண்ணாமலையாருக்கு ‘அரோகரா’ என்று பக்தி கோஷம் எழுப்பினர்.

    இதையடுத்து வழக்கமாக நடைபெறுவது போன்று முதலில் விநாயகர் ரதத்தை பக்தர்கள் வடம் பிடித்து சிறிது தூரம் இழுத்தனர். தொடர்ந்து முருகர், அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ரதங்களும் இழுக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சமூர்த்திகள் பிரகார உலா நடைபெற்றது.

    பஞ்சமூர்த்திகள் உலா காலை 6.30 மணி அளவில் மேளதாளங்கள் முழங்க தொடங்கி 9 மணி அளவில் நிறைவடைந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

    பின்னர் தொடர்ந்து 3 நாட்கள் இரவில் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் தெப்ப உற்சவமும், நிறைவாக 23-ந்தேதி சண்டீகேஸ்வரர் உலாவும் நடைபெற உள்ளது.
    Next Story
    ×