search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாரைக்கு முக்தி கொடுத்த இறைவன்
    X
    நாரைக்கு முக்தி கொடுத்த இறைவன்

    மதுரையில் ஆவணி மூலத்திருவிழா: நாரைக்கு முக்தி கொடுத்த இறைவன்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும், ஆவணி மூலத் திருவிழாவில் நேற்று நாரைக்கு முக்தி கொடுத்த லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன் அருள்பாலித்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடந்து வருகிறது.

    ஆவணி மூல திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான சிவபெருமானின் திருவிளையாடல் லீலைகள் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகின்றன.

    நேற்று காலையில் ‘நாரைக்கு முக்தி கொடுத்த லீலை’ நடந்தது. அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் நாரைக்கு முக்தி அளித்த சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். இரவு 7 மணிக்கு சுவாமி பூதவாகனத்திலும், அம்மன் அன்னவாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.

    நாரைக்கு முக்தி கொடுத்தல் லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-

    மதுரைக்கு தெற்கே ஒரு குளத்தில் நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த குளத்தில் நீர் வற்றியதால் மற்றொரு குளத்திற்கு சென்றது. அப்போது அந்த குளத்தில் முனிவர்கள் நீராடிக்கொண்டிருந்தனர். மேலும் அந்த குளத்தில் இருந்த மீன்கள் முனிவர்கள் மீது புரண்டு விளயாடியது. அதை கண்ட நாரை அந்த மீன்களை உண்ணக்கூடாது என்று நினைத்து சாப்பிடாமல் இருந்தது.

    அப்போது அங்கிருந்த முனிவர்கள் பேசும் போது, மதுரையை பற்றியும் அங்கிருந்த பொற்றாமரை குளத்தின் சிறப்பை பற்றியும் தெரிவித்தனர். உடனே நாரை மதுரைக்கு வந்து பொற்றாமரைக்குளத்தில் நீராடி இறைவனை வணங்கி முக்தி பேறு பெற்றது.

    அப்போது நாரை இறைவனிடம், “பொற்றாமரைக்குளத்திலே நீர்வாழ் உயிர்கள் எதுவும் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் மற்ற பறவைகள் அதனை உண்ணக்கூடும். அதனால் பாவம் வந்து சேரும். எனவே நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் பொற்றாமரைக்குளத்தில் இருக்கக்கூடாது” என்று கேட்டு இறைவனிடம் வரம் வாங்கியது.

    நாரைக்கு இறைவன் அருளிய வரத்தின்படி இன்று வரை பொற்றாமரைக்குளத்தில் நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் இல்லை என்று புராணம் கூறுகிறது. இந்த திருவிளையாடலை குறிக்கும் வகையில்தான், நாரைக்கு முக்தி கொடுத்த லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×