
இந்தாண்டு திருவிழா கடந்த 22-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் இரவு பூதகி வாகனம், கிளி வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், காளை வாகனம், சிம்ம வாகனம், தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளினார். காலை 8 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதி்ல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் கோவிலை சுற்றி நான்கு ரத வீதி வழியாக வந்து நிலையை வந்தடைந்தது.
தொடர்ந்து இரவு அம்மன் யானை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10-ம் திருநாளான இன்று(புதன்கிழமை) காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மாலை சந்தனக்குடம், பால்குடம் ஆகிய நிகழ்ச்சியும், இரவு மலர் பல்லக்கில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை காலை விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் மற்றும் இரவு மூலஸ்தான அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க ரத புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சிவகங்கை இணை ஆணையர் தனபால் உத்தரவின்பேரில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் சிவலிங்கம், கோவில் செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.