
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கிராம தேவதைகளான செல்லியம்மன் மற்றும் அய்யனாருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
முன்னதாக சித்திவிநாயகர், கொளஞ்சியப்பருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் உற்சவ மூர்த்திகளான சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சிறப்பு அலங்காரத்தில் கிராம தேவதைகளுக்கு அருள்பாலிக்க செல்லியம்மன் மற்றும் அய்யனாருக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து சாமி வீதிஉலா நடைபெற்றது.
இதையடுத்து நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு மேல் கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாக்கான கொடியேற்றம் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மயில், ஆட்டுக்கிடா, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதிஉலா நடைபெறும்.
விழாவில் வருகிற 27-ந்தேதி அதிகாலை 4.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. இதையடுத்து 28-ந்தேதி நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் அதிகாலையில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் திருமுதுகுன்றத்தில் எழுந்தருளி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் அலகு போட்டுக்கொண்டும், காவடி எடுத்துக்கொண்டும் ஊர்வலமாக கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். பின்னர் மாலையில் கொளஞ்சியப்பருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.