search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி முருகன் கோவில்
    X
    பழனி முருகன் கோவில்

    பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் 25 ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பழனியில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் 27-ந்தேதி இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

    அடுத்த நாள் 28-ந்தேதி மாலை 4 மணி அளவில் விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்டம் நடக்கிறது. விழாவையொட்டி பழனிக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்தும், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின்னர், அவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்த பிறகே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். சிறப்பு தரிசனத்துக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்வதற்காக பஸ் நிலையம், ரெயில் நிலையம், தேவஸ்தான தகவல் மையம் ஆகிய இடங்களில் தேவையான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் திருவிழாவையொட்டி பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக பக்தர்கள் நடைபாதையில் உள்ள புதர்கள் அகற்றப்பட வேண்டும். இரவில் பக்தர்கள் அந்த வழியாக நடந்து செல்லும் வகையில் மின் விளக்குகளை அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தினர் அமைக்க வேண்டும். பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக இடும்பன்குளம், சண்முகநதியில் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் புனித நீராடும் பக்தர்களின் பாதுகாப்புக்காக தீயணைப்பு படை வீரர்கள் அங்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மண்டகப்படிதாரர்கள் 50 பேர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதேபோல் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். அவர்களையும் குழுவாக பிரித்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில் நிர்வாகம் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    வயதானவர்கள், குழந்தைகள், சிறுவர்களை கோவிலுக்கு அழைத்து வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். திருவிழாவையொட்டி கொடுமுடி தீர்த்தம் கொண்டுவர பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    அதிலும் குழுவாக வரும் பக்தர்கள் அனைவரும் தீர்த்தம் கொண்டு வருவதை தவிர்த்துவிட்டு, குழுவில் உள்ள சிலர் மட்டும் தீர்த்தம் கொண்டு வரலாம். இதனை கோவில் நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×