search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் தெப்ப உற்சவம் கண்டருளிய போது எடுத்த படம்.
    X
    உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் தெப்ப உற்சவம் கண்டருளிய போது எடுத்த படம்.

    ஸ்ரீரங்கம்: உபய நாச்சியார்களுடன் தெப்பஉற்சவம் கண்டருளிய நம்பெருமாள்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் தெப்பத் திருவிழாவையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் திருவிழாவையொட்டி உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் தெப்ப உற்சவம் கண்டருளிய போது எடுத்த படம்.(உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்)
    ஸ்ரீரங்கம், பிப்.23-

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் தெப்பத் திருவிழாவையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்ப உற்சவம் கண்டருளினார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பஉற்சவம் நேற்று மாலை நடைபெற்றது. இதனையொட்டி மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சி விகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேர்ந்தார்.

    அதனைத்தொடர்ந்து இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுளினார். பின்னர் இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைந்தார். அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் 9-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×