
கோவிலுக்குள் தங்கத்தேர் வலம் வருவதால் கோவிலுக்கு கணிசமான வருமானம் கிடைத்தது. கடந்த ஆண்டில் மார்ச் மாதம் 17-ந்தேதி பக்தர்கள் தங்கத்தேர் இழுத்தனர். இந்த நிலையில் உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டில் மாதம் 20-ந்தேதி கோவில் மூடப்பட்டது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டு சில கட்டுப்பாடுகளுடன் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திறகு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதற்கிடையில் கடந்த 3-ந்தேதி முதல் அர்ச்சனைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தை அமாவாசையையொட்டி கடந்த 11 மாதத்திற்கு பிறகு கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தில் தங்கத்தேர் வலம் வந்தது. கோவில் உள்துறை சூப்பிரண்டு அங்கயற்கன்னி, உதவி கோட்டப் பொறியாளர் சிவமுருகானந்தம், பேஸ்கார்கள் தேவகி, புகழேந்தி மற்றும் கோவில் ஊழியர்கள் தங்கத்தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பக்தர்கள் தங்கத் தேர் இழுக்க பதிவு செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆகவே பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தங்கத் தேர் இழுத்து வழிபடுவதற்காக ஆர்வத்துடன் முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.
தங்கத்தேரின் மேல்புறத்தில் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உருண்டைவடிவில் ரசக் குண்டுகள் உள்ளன. அதில் சில குண்டுகள் சேதமாகி விழுந்துவிட்டதா? என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு சில இடங்களில் ரசக்குண்டுகள் இல்லாத நிலை உள்ளது.. இந்த நிலையை தவிர்க்க வேண்டும். அதற்காக தங்கத்தேரில் இடைவெளியாக உள்ள மேல்புறத்தில் ரசக்குண்டுவை பொருத்தப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.