search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி
    X
    பழனி

    தைப்பூசமும்...பழனி மலையும்...

    பழனிக்கு வரும் மக்களின் பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் எல்லாம் தமிழ்க்கடவுள் முருகனோடு தொடர்புடைய பண்பாட்டு கூறுகளை எடுத்துக் காட்டுகின்றன.
    சமஸ்கிருதத்தில் ‘புஷ்டி' என்றால் பலம் என்று பொருள். இந்த சொல்லில் இருந்து மருவிய புஷ்யம் என்பதே பூசம் என்றானதாக கூறப்படுகிறது. பூசம் என்பது இந்திய வானியலிலும், ஜோதிடத்திலும், ராசி சக்கரத்தில் பேசப்படுகின்ற 27 நட்சத்திரங்களில் 8-வது நட்சத்திரம் ஆகும். இந்நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளி, மென்பேச்சு மற்றும் ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள். அறிவுசார்ந்த வேலைகளில் மிகுந்த ஈடுபாடுடன் இருப்பார்கள் என்பது நம்பிக்கை ஆகும்.

    நட்சத்திர சிந்தாமணி எனும் நூலில் பூச நட்சத்திரத்தை பற்றி கூறுகையில், பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல மதிப்பு உடையவர்களாகவும், வழக்கறிந்து வழக்காடுவதில் வல்லவர்களாகவும், குற்றமற்ற மனநிலையில் மற்றவர்களை மகிழ்பவர்களாகவும் விளங்குவார்கள் என்கிறது. ராமாயணத்தில் பரதன் பூச நட்சத்திரத்தில் பிறந்தான் என்றும் கூறப்பட்டுள்ளது.

    தைப்பூசம் அன்று வரக்கூடிய பவுர்ணமி நாளன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலை சுற்றியுள்ள ரதவீதிகளில் நடைபெறும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கானோர் வருகின்றனர். இதனை தேர் நோன்பு என்றும் கூறுவர். இந்நாளில் மக்கள் பொங்கல் வைத்தும், கும்மியடித்தும் பழனி முருகனை வழிபடுகின்றனர். பழனி முருகன் கோவிலில் இத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உமாதேவியார் முருகனிடம் வேலை எடுத்துக் கொடுத்து தாரகன் என்னும் அசுரனை வென்று வரும்படி கூறிய நிகழ்வினை போற்றும் வகையில் இவ்விழா நடத்தப்படுகிறது என்பது ஐதீகமாகும்.

    இந்நாளில் பல்வேறு நேர்த்தி கடன்களுடன் விரதமிருந்து வரும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அதன் தாக்கம் குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தங்களின் வாழ்க்கை செழிப்பாகும், நினைத்த காரியம் கைக்கூடும் என்று நினைத்து பழனிக்கு வரும் மக்களின் பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் எல்லாம் தமிழ்க்கடவுள் முருகனோடு தொடர்புடைய பண்பாட்டு கூறுகளை எடுத்துக் காட்டுகின்றன.
    Next Story
    ×