
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் ரதசப்தமி விழாவின்போது உற்சவ மூர்த்தியான மலையப்ப சாமி காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் மாடவீதிகளில் வீதி உலாவருவது வழக்கம். இந்த நிலையில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி ரதசப்தமி விழா நடக்கிறது.
அப்போது காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரியபிரபை வாகனத்திலும், 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும், 11 மணி முதல் நண்பகல் 12 மணிவரை கருட வாகனத்திலும், 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும் மலையப்பசாமி வீதி உலா நடக்கிறது.
பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனத்திலும், 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரைவு தரிசன மற்றும் சர்வ தரிசன டோக்கன்களை பெற்றுள்ள பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படும். ரதசப்தமி உற்சவத்தை காண விரும்பும் பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படும் பிப்ரவரி மாத விரைவு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
ரதசப்தமி நாளில் நடக்கும் தீர்த்தவாரி, சக்கரத்தாழ்வாருக்கு தனிமையில் நடத்தப்படும். அப்போது குளத்தில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதியில்லை.
இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்தனர்.