search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொடியேற்றம் நடைபெற்றதையும், சிறப்பு அலங் காரத்தில் மாரியம்மன் எழுந்தருளியதையும் படத்தில் காணலாம்.
    X
    கொடியேற்றம் நடைபெற்றதையும், சிறப்பு அலங் காரத்தில் மாரியம்மன் எழுந்தருளியதையும் படத்தில் காணலாம்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 6.30 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

    அதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, அம்மன் படம் வரையப்பட்ட கொடி, கோவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மாலையில் உற்சவ அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு மரகேடயத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    இதேபோல் தினமும் காலையில் பல்லக்கில் அம்மன் புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து இரண்டாம் நாள் முதல் ஆறாம் நாள் வரை முறையே சிம்மவாகனம், பூதவாகனம், அன்னவாகனம், ரிஷப வாகனம், யானைவாகனம், வெள்ளிசேஷ வாகனம், வெள்ளிகுதிரை வாகனம் ஆகியவற்றில் இரவு 8 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைபெறும்.

    திருவிழாவின் ஒன்பதாம் நாளான 27-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், மாலை 5 மணிக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். பின்னர் இரவு 11 மணிக்கு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார்.

    திருவிழாவின் 10-ம் நாளான 28-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் காலை 8.30 மணிக்குள் தைப்பூசத்திற்கு காவிரியில் இருந்து கண்ணாடி பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருளுகிறார். பின்னர் நொச்சியம் வழியாக வடதிருகாவிரிக்கு சென்றடைகிறார். அங்கு மாலையில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். பின்னர் இரவு 10 மணிக்கு மேல் 11 மணி வரை ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் சீர்பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து நள்ளிரவு ஒரு மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து அதிகாலை 3 மணி முதல் காலை 5 மணி வரை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வட திரு காவிரியிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி நொச்சியம் மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி இரவு 11 மணிக்கு ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார்.

    அதைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று கொடிமரத்திற்கு அம்மன் புறப்பாடாகி கொடி படம் இறக்கப்படுகிறது. இரவு 12 மணிக்கு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சென்றடைகிறார். அதைத்தொடர்ந்து நடை சாத்தப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×